ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணி விரிவாக்கம்
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணி, விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் இரண்டாவது குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணி, விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணியை முக்குளிப்பாளர்கள் நேற்றுத் தற்காலிகமாய் நிறுத்தியதாக இந்தோனேசியாவின் தேசியத் தேடி மீட்கும் குழு குறிப்பிட்டது.
தற்போது, தேடல் பணியில் 268 முக்குளிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்குமுன், தேடல் பணியில் ஈடுபட்ட முக்குளிப்பாளர்களின் எண்ணிக்கைவிட அது ஒரு மடங்கு அதிகம்.
மீட்புப் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 ஹெலிகாப்டர்கள், 55 கப்பல்கள், 18 படகுகள் ஆகியவற்றின் உதவியோடு 4ஆயிரத்துக்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள், தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள், இதுவரை, மனித உடல் பாகங்களைக் கொண்ட 141 பைகளைக் காவல்துறையைச் சேர்ந்த உடல் அடையாள நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.