சைக்கிளில் தேநீர் விற்கும் பொறியியல் பட்டதாரி- கிருமித்தொற்றால் உருவான ‘டீ தம்பி’
பொறியியல் துறைப் பட்டம் கைவசம் உண்டு.
பொறியியல் துறைப் பட்டம் கைவசம் உண்டு.
ஆனால், தற்போது சைக்கிளில் தேநீர் விற்கிறார் 23 வயது கவிவாணன் சுப்ரமணியம்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள செராஸ் (Cheras) நகரைச் சேர்ந்த அவர், சென்ற ஆண்டுதான் தமது பட்டப்படிப்பை முடித்தார்.
அவர் வேலைச் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்த சமயம், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திரு. கவிவாணனுக்கோ அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை, கலக்கம்...
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப கிருமித்தொற்றுச் சூழலில் வேலையைத் தேடுவதைவிட வேலையை உருவாக்குவதே சிறந்தது என்ற முடிவுக்குவந்தார் அவர்.
அந்தச் சிந்தனையின் பலன்தான் சைக்கிளில் மசாலா தேநீர் விற்கும் வியாபார உத்தியாக மாறியது.
திரு. கவிவாணன் 'டீ தம்பி'யை உருவாக்கினார்.
ஏன் தேநீர்?
எனக்குத் தேநீர் மிகவும் பிடிக்கும். பிடித்த வேலையைத் தேடுவதைக் காட்டிலும் பிடித்ததை வியாபாரமாக மாற்றுவது இன்னும் சிறப்பு; மிகவும் எளிது என எனக்குத் தோன்றியது.
மேலும், மலேசியாவையும் மலைத் தேநீரையும் பிரிக்கவே முடியாது. மாலை நேரங்களில் தேநீர் பலகாரங்களுக்காகவே உணவகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதையே என்னுடைய பாணியில் வழங்க முயற்சி செய்தேன். அதன் பலனே என் “டீ தம்பி”
என்றார் திரு. கவிவாணன்.
பட்டப் படிப்பை முடித்து விட்டு சைக்கிளில் தேநீர் விற்பதை, முதலில் அவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை.
வியாபாரமும் தொடக்கத்தில் சூடு பிடிக்கவில்லை.
சைக்கிளில் தேநீர் விற்கும் தம்மை, மக்கள் விசித்திரமாய்ப் பார்த்ததாகக் கூறினார் அவர்.
வாய்ப்புத் தந்து தேநீரைச் சுவைத்துப் பார்த்த சிலர், தொடர்ந்து ஆதரவு அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒருவருக்கொருவர் வாய்மொழியாகப் பரிந்துரைகள் பரவவே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது 'டீ' தம்பிக்கு.
மலேசியாவின் லிட்டில் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸ் (Brickfields) வட்டாரம் முழுக்க சைக்கிள் மிதித்த திரு. கவிவாணன், வாடிக்கையாளர்களின் வசதிக்காகப் பிரிக்ஃபீல்ட்ஸ் ஹோங் லியோங் வங்கிக்கு முன்னாலுள்ள ஒரே இடத்தில் தற்போது வர்த்தகம் புரிந்துவருகிறார்.
எனக்குத் தெரிந்தவரை, தற்போதைய காலக்கட்டத்தில், மலேசியாவில் எவரும் பாரம்பரிய முறையில், சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்வதாகத் தெரியவில்லை.
தொடக்கத்தில் ஆதரவு வழங்கிய வாடிக்கையாளர்களும் அந்த வித்தியாசமான பாணியைப் பார்த்துத்தான் ஈர்க்கப்பட்டனர்.
என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டாரத்தில் ரொட்டி, பன், வடையுடன் தமது மசாலா தேநீரும் காப்பியும் தற்சமயம் மக்களின் முதன்மைத் தெரிவுகளில் ஒன்றாக அமைந்ததில் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் திரு. கவிவாணன் கூறினார்.