சாத்தியமல்ல என்று கருதப்பட்டதைச் சாதித்துள்ளோம்: தாய்லந்துக் குகை மீட்புப் பணியின் தலைமை அதிகாரி
அனைவரையும் வெற்றிகரமாக மீட்டது சரித்திரச் சிறப்புமிக்க ஒன்று என அவர் கூறினார்.
தாய்லந்து: உலகின் ஆகக் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றான தாம் லுவாங் குகை மீட்பை வழிநடத்திய நரோங்சாக் ஒசோட்டானகோர் (Narongsak Osottanakorn) நிரூபர்களிடம் பேச வந்தபோது அவருக்கு பலத்த கரவொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாத்தியமல்ல என்று உலகெங்கும் கருதப்பட்ட ஒன்றை சாதித்துள்ளதாகவும் சிறுவர்களையும் அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்டது தாய்லந்திற்குப் பெருமை சேர்க்கும் ஒன்று என்றும் அவர் கூறினார்.
அந்த 13 பேரையும் மீட்க முக்குளிப்பாளர்கள் பாறைகள் நிறைந்த குறுகலான 1.7 கிலோமீட்டர் பாதையைக் கடக்க வேண்டியிருந்தது.
இதில் அந்த 13 பேரில் யாருக்கும் முக்குளிக்க தெரியாது.
இருப்பினும் அனைவரையும் வெற்றிகரமாக மீட்டது சரித்திரச் சிறப்புமிக்க ஒன்று என அவர் கூறினார்.
குகையினுள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் இறுதி நாளன்று பொங் பாவிலுள்ள நிர்வாக அலுவலகத்தில் நிருபர்களோடு பேசியபோது, அந்த மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக திரு நரோங்சாக் கூறினார்.
அதே சமயத்தில் மீட்புப் பணியின்போது உயிரிழந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சமான் குனன் இறந்ததையும் அவர் வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார்.