தாய்லந்தில் தேர்தல் நடத்தக் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்கள்
தாய்லந்தில் பொதுத் தேர்தலை இவ்வாண்டே நடத்த, ஜனநாயக ஆதரவுக் குழுக்கள், அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளித்து வருகின்றன.
தாய்லந்தில் பொதுத் தேர்தலை இவ்வாண்டே நடத்த, ஜனநாயக ஆதரவுக் குழுக்கள், அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளித்து வருகின்றன.
ஆர்ப்பாட்டங்களை வெவ்வேறு நகரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நடத்த அவை திட்டமிட்டுள்ளன.
முதல் ஆர்ப்பாட்டம் நக்கோன் ரட்சசிம்ஹா நகரில் இன்று தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மற்றோர் ஆர்ப்பாட்டம் தலைநகர் பேங்காக்கில் இவ்வாரம் நடைபெறும்.
இன்னும் பல ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, மே மாதத்தில் மாபெரும் பேரணி ஒன்றுடன் அது முடிவடையும்.
ஆர்ப்பாட்டங்களைத் தவிர, அரசாங்கத்திற்கு நெருக்குதலளிக்க வேறு வழியில்லை என்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
அந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை இருக்காது என்றும் "அரசியல் அதிகாரம் மக்களுக்கே" என்பதை வலியுறுத்தும் விதத்தில் இருக்கும் என்றும் The Nation நாளேடு தெரிவித்தது.
ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லந்தில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து ராணுவ அரசாங்கம், பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதித்தது.
பிரதமர் பிராயுத் சானோச்சா, இவ்வாண்டு நவம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி கூறினார்.
ஆனால், தேர்தல் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றின் காரணமாகத் தேர்தல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம்.
அதற்குள், நாடு கடத்தப்பட்ட தாய்லந்தின் முன்னைய பிரதமர்களும் அண்ணன் தங்கையுமான திரு. தாக்சின் ஷினாவாட்டும் திருவாட்டி யிங்லக் ஷினாவாட்டும் சொந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பலாம் என நம்பப்படுகிறது.
இதுவரை, தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி மௌனமாக இருக்கும் திருவாட்டி யிங்லக் இனிமேல் அது பற்றிப் பேசக்கூடும் எனத் தாய்லந்து ஊடகங்கள் ஊகிக்கின்றன.