வாகன நுழைவு அனுமதித் திட்டத்தின் அமலாக்கம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு: மலேசியப் போக்குவரத்து அமைச்சர்
மலேசியாவின் வாகன நுழைவு அனுமதித் திட்டத்தின் அமலாக்கம் தொழில்நுட்பச் சிரமங்களால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (Anthony Loke) தெரிவித்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
மலேசியாவின் வாகன நுழைவு அனுமதித் திட்டத்தின் அமலாக்கம் தொழில்நுட்பச் சிரமங்களால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (Anthony Loke) தெரிவித்துள்ளார்.
RFID அடையாளப் பட்டையைப் பொருத்துவதில் சிரமங்கள் எழுந்துள்ளதாய் அவர் சொன்னார்.
அந்தப் பட்டை பொருத்தப்பட்டுள்ள வாகனங்களைக் கையாள்வதிலும் தொழில்நுட்ப அமைப்பு சிரமத்தை எதிர்நோக்குவதாகத் திரு லோக் கூறினார்.
அதன் தொடர்பில் மலேசியச் சாலைப் போக்குவரத்துப் பிரிவுடன் சந்திப்பு நடத்தியிருப்பதாய் அவர் தெரிவித்தார்.
அடையாளப் பட்டையின் தொடர்பிலான புதிய ஏற்பாடுகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
அதன் பிறகு வாகனங்கள் அடையாளப் பட்டையை எளிதாகப் பொருத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூர் வாகனமோட்டிகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றார் அமைச்சர் லோக்.
வாகன நுழைவு அனுமதி நடைமுறை அறிமுகமான பின்னர் அடையாளப் பட்டை இல்லாமல் நுழையும் வாகனங்கள், மலேசியாவிலிருந்து வெளியேறும்போது அவற்றின்மீது அபராதம் விதிக்கப்படலாம்.