வூஹான் கிருமி தொடங்கிய சந்தையில் ஓநாய், எலி, பாம்பு இறைச்சி...
வூஹான் கிருமி தொடங்கியதாக நம்பப்படும் கடலுணவுச் சந்தையில் ஓநாய் குட்டிகள், எலி, காட்டுப்பூனை ஆகியவற்றின் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
வூஹான் கிருமி தொடங்கியதாக நம்பப்படும் கடலுணவுச் சந்தையில் ஓநாய் குட்டிகள், எலி, காட்டுப்பூனை ஆகியவற்றின் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹுவானான் கடலுணவுச் சந்தை வூஹான் நகரின் மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ளது.
சட்ட விரோதமாக காட்டு விலங்குகளின் இறைச்சி அந்தச் சந்தையில் விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சார்ஸ் கிருமியோடு தொடர்புடைய காட்டுப்பூனை இறைச்சியும் அங்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
முதலைகள், பாம்புகள், எலிகள், மயில்கள், எறும்பு தின்னி, ஒட்டகம் முதலிய 122 விலங்குகளின் இறைச்சி ஹுவானான் சந்தையில் விற்கப்பட்டதாக ஊடகங்கள் கூறின.
விலங்குகளின் இறைச்சிக்கான விலை ஓர் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
புதிதாக வெட்டப்பட்ட இறைச்சியில் இருந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சி வரை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் வசதியும் அங்கு உண்டு.
சந்தையில் இருந்த ஏதோ ஒரு விலங்கிலிருந்து தான் கிருமி பரவி இருக்கலாம் என்று சீனா கூறியுள்ளது, இருப்பினும் அது எந்த விலங்கில் இருந்து பரவியது என்பது புரியாத புதிராக உள்ளது.
கிருமியால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தச் சந்தையில் வேலை செய்தவர்கள் தான்.
வூஹான் கிருமியால் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மாண்டனர்.
கிருமிப் பரவலைத் தடுக்க வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.