மாதவிடாய்க் காலத்திற்காக ஊழியர்களுக்கு விடுப்பு கொடுக்கும் இந்திய உணவு விநியோக நிறுவனம்
இந்தியாவின் ஆகப் பெரிய உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான Zomato அதன் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்திற்கான விடுப்பை வழங்கவுள்ளது.
இந்தியாவின் ஆகப் பெரிய உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான Zomato அதன் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்திற்கான விடுப்பை வழங்கவுள்ளது.
ஆண்டுக்கு 10 நாள் வரையிலான மாதவிடாய் விடுப்பை, ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
மாதவிடாய் போன்ற விவகாரங்கள் அதிகம் பேசப்படாத இந்தியாவில், நிறுவனத்தின் முடிவு பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கும், திருநம்பிகளுக்கும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அறிவித்தார்.
Zomato நிறுவனத்தில், அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நம்பிக்கையான வேலைச் சூழலை உருவாக்க விரும்புவதாக அவர் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
மாதவிடாய் விடுப்புக்கு விண்ணப்பிப்பதில் தயக்கம் ஏதும் இருக்கக்கூடாது என்றார் கோயல்.
விடுப்பைப் பற்றி மற்றவர்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் என்றும், அது சங்கடமான ஒன்றாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அவதியுறுவது தமக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், அந்த நேரத்தில் பெண்களுக்கு ஆதரவு தேவை என்றார்.
நிறுவனத்தில் முழுமையான ஒத்துழைப்பு சூழலை உருவாக்க அது வகைசெய்யும் என்றார் திரு. கோயல்.
இந்தியாவில், மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அச்சுத்தமானவர்கள் என்று கருதப்படுவதுண்டு.
சில குடும்பங்களில், குறிப்பிட்ட அந்த 3 நாள்களும் பெண்களை வீட்டிலிருந்து ஒதுக்கிவைத்துத் தனியிடத்தில் தங்க வைக்கும் வழக்கம் உண்டு.
அதனால், மாதவிடாய் தொடர்பான பாதுகாப்பு, சுகாதாரப் பழக்கவழக்கங்கள் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக மாதவிடாய் விடுப்பு, நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.