மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்று நாளையுடன் ஈராண்டு
இந்தியப் பிரதமராகத் திரு. நரேந்திர மோடி பதவியேற்று நாளையுடன் ஈராண்டாகிறது.
இந்தியப் பிரதமராகத் திரு. நரேந்திர மோடி பதவியேற்று நாளையுடன் ஈராண்டாகிறது.
முன்னேற்றம், ஒட்டுமொத்த வளர்ச்சி, அதிகாரக் கெடுபிடி நீக்கம் போன்ற கொள்கைகளை அவர் முன் வைத்தார்.
சென்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க அவை காரணமாயின.
என்றாலும் கடந்த ஈராண்டு கால ஆட்சியில் திரு. மோடிக்குச் சில சவால்களும் இருந்தன.
2014 நாடாளுமன்றத் தேர்தல்.
543 தொகுதிகளில் 282 இடங்களை வென்றது பாரதிய ஜனதா கட்சி.
கடந்த முப்பதாண்டுகளில் அந்தக் கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்கு திரு. மோடியின் தனிப்பட்ட செல்வாக்கும் காரணம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சில மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்குச் சிறப்பான முடிவுகள் கிட்டவில்லை.
இருப்பினும் முந்தைய ஆண்டுகளை விட அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளதை ஆளும் கட்சியினர் சுட்டுகின்றனர்.
கடந்த ஈராண்டுகளில் திரு. மோடி குறைந்தது 40 சமூகத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
தூய்மை இந்தியா, மின்னியல் இந்தியா, மேக் இன் இந்தியா ஆகியன அவற்றுள் சில முக்கியத் திட்டங்கள். சமூகத் திட்டங்களின் விளம்பரத்துக்கு சுமார் 148 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சமூகத் திட்டங்கள் வெறும் கண்துடைப்பு என்பது எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டு.
எல்லாருக்குமான வளர்ச்சி, நல்ல காலம் வந்து விட்டது என்ற வாக்குறுதிகளைத் திரு. மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர்கள் சாடுகின்றனர்.
நிலச் சீர்திருத்த மசோதா, பொருள் சேவை வரி மசோதா ஆகியவற்றில், பாரதிய ஜனதாவால், காங்கிரஸ் கட்சியோடு கருத்திணக்கம் காண முடியவில்லை.
அதனால் நாட்டின் பொருளியல் இக்கட்டான சூழலில் உள்ளது என்பது எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டு.
பீகாரிலும் புதுடில்லியிலும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியைத் தழுவியதை அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டுகின்றனர்.
என்றாலும் அண்மையில் நடந்து முடிந்த அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா ஓரளவு முன்னேறியுள்ளது.
அதற்குத் திரு. மோடியின் தலைமைத்துவமே காரணம் என்றும் அவர்கள் கூறினர்.