3D பிரிண்டரால் தயாரிக்கப்பட்ட முதல் மருந்துக்கு ஒப்புதல்
3D பிரிண்டரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் மருந்துக்கு அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒஹையோவிலுள்ள Aprecia Pharmaceuticals நிறுவனம் வலிப்புக்கான அந்த மருந்தை தயாரித்துள்ளது.
வாஷிங்டன், அமெரிக்கா: 3D பிரிண்டரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் மருந்துக்கு அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் ஒஹையோவிலுள்ள Aprecia Pharmaceuticals நிறுவனம் வலிப்புக்கான அந்த மருந்தை தயாரித்துள்ளது.
ஒரு மாத்திரைக்கு 1,000 மில்லிகிராம் அளவு வரை அதன் இயந்திரத்தால் உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனம் கூறியது. அந்த மருந்து சிறிதளவு தண்ணீரில் கரையும் தன்மை உடையது. மாத்திரைகளை விழுங்க சிரமப்படுவோருக்கும், பிள்ளைகளுக்கும் அது உதவியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்தது.
3D பிரிண்டரால் தயாரிக்கப்பட்ட முதல் மருந்தான Spritam-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். Spritam அல்லது Levetiracetam, பல ஆண்டுகளாக மற்ற வடிவங்களில் விற்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
Aprecia என்ற நிறுவனம், 2016ன் முதல் காலாண்டிற்குள் அந்த மருந்தை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. 3D தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மற்ற மருத்துவ பொருட்கள், உதாரணத்திற்கு செயற்கை சாதனங்களுக்கு, உணவு, மருந்து நிர்வாகம் ஏற்கனவே பச்சை கொடி காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் வெவ்வேறு மருந்துகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக Aprecia தனது இணையப்பக்கத்தில் கூறியுள்ளது. அரிய நோய்கள் அல்லது குறிப்பிட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான பிரத்யேக சாதனங்களை உருவாக்க, சுகாதார துறை 3D பிரிண்டர்களைப் பயன்படுத்தி வருகிறது.