தந்தையர் தின அன்பளிப்பு-சில பரிந்துரைகள்
தந்தையர் தினம் இன்னும் இரண்டே நாட்களில்! தந்தைக்குச் சிறப்பாக என்னென்ன செய்யலாம்?
தந்தையர் தினம் இன்னும் இரண்டே நாட்களில்!
அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாட இதோ, அனைத்துத் தந்தையருக்கும் ஏற்ற அன்பளிப்புக்கான சில யோசனைகள்:
1) கடிதம் எழுதுவது
தந்தையரிடம் பகிர்ந்துகொள்ள பல விஷயங்கள் இருக்கும்.
அவருடன் ஒன்றாகச் செலவிட்ட மறக்க முடியாத பொழுதுகளைப் பற்றியும் அவரிடம் முகத்திற்கு நேர் சொல்லத் தயங்கும் அன்பான வார்த்தைகளையும் கடிதம் ஒன்றில் எழுதி அந்தக் கடித்ததை அழகாக அலங்கரித்து அவரிடம் கொடுக்கலாம்.
2) தாவரங்கள் கொடுப்பது
இவை சாதாரணத் தாவரங்கள் அல்ல. இவை காகிதத்தால் செய்யப்பட்டவை. ஆகையால் இவை நீண்ட நாள் நீடித்திருக்கும். இவற்றை நீங்களே உங்கள் கைப்பட செய்து உங்கள் தந்தையரை அசத்தலாம்.
3) புகைப்பட மெழுகுவர்த்தி தாங்கி
தந்தையர் நம் வாழ்வுக்கு ஒளியூட்டுகின்றனர். அதனைப் பிரதிபலிக்கும் வண்ணம், உங்கள் தந்தையருடன் எடுத்த நிழற்படங்களை அச்சிட்டு, அவற்றை ஒரு மெழுகுவர்த்தி தாங்கியில் ஒட்டி அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
4) தையல் இல்லாத தலையணை
நமக்காக தினமும் வேலைக்குச் சென்று களைப்புடன் வீடு திரும்பும் தந்தையர் நன்றாக உறங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று விரும்புவோம். நீங்களே உங்கள் கையால் ஒரு தலையணையைத் தயாரித்துக் கொடுத்தால், அவருக்கு நிச்சயம் நல்ல தூக்கம் வரும். அதில் பிள்ளைகளைப் பற்றிய இனிய கனவும் வரலாம் !
5) அலங்கரிக்கப்பட்ட தட்டில் காலை உணவு பரிமாறுதல்
தந்தையர் தினத்தன்று நீங்களே உங்கள் கையால் காலை உணவு சமைத்து அவருக்குப் பரிமாறுங்கள். கூடுதலாக, நீங்களே சரியான அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தி அலங்கரித்த ஒரு தட்டில் உணவைப் பரிமாறுங்கள்.