ஹஜ்ஜுப் பெருநாள் - தெரிந்துகொள்வோம்
முஸ்லிம்களால் ஆண்டுதோறும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன் பின்னணி என்ன? கொண்டாட்டத்தின் முக்கிய அம்சம் என்ன?
முஸ்லிம்களால் ஆண்டுதோறும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன் பின்னணி என்ன? கொண்டாட்டத்தின் முக்கிய அம்சம் என்ன? தெரிந்துகொள்வோம்...சுருக்கமாக!
ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் என்ன?
பல ஆண்டுகளாக, குழந்தை பாக்கியம் இல்லாத நபி இப்ராஹிமுக்குப் பிறந்த மகன்தான் நபி இஸ்மாயில்.
ஆனால், தமது ஒரே மகனான, நபி இஸ்மாயிலைத் தியாகம் செய்யக் கோரி நபி இப்ராஹிமுக்கு இறைவன் கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது.
நபி இப்ராஹிம் இறைக் கட்டளைக்கு இணங்க, அதை நிறைவேற்றத் தயாரானதன் மூலம் இறைவன் மீது தாம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்த்தினார்.
அதனால், மகனுக்கு பதிலாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளைத் தியாகம் செய்யுமாறு இறைவன் கட்டளையிட்டான்.
விலங்குகளை பலி கொடுக்கும் சடங்கு குர்பான் என்று அழைக்கப்படுகிறது.
அந்த நிகழ்வுதான் ஹஜ்ஜுப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
நபி இப்ராஹிம் செய்யத் துணிந்த தியாகத்தால், தியாகத் திருநாள் என்றும் அது அழைக்கப்படுகிறது.
எப்போது கொண்டாடப்படுகிறது?
5 நாள் நடைபெறும் ஹஜ் யாத்திரையின் நிறைவை ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் குறிக்கின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், 2006ஆம் ஆண்டில் ஹஜ்ஜுப் பெருநாள் இருமுறை கொண்டாடப்பட்டது.
ஆண்டின் தொடக்கத்திலும், இறுதியிலும்...
எப்படிக் கொண்டாடப்படுகிறது?
அவரவர் வசதிக்கேற்ப, ஆடு, மாடு, செம்மறியாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், குர்பான் செய்யப்படும்.
பின், குர்பான் செய்யப்பட்ட அந்த இறைச்சி மூன்று பங்குகளாகப் பிரிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு பங்கைத் தமக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பங்கு உறவினர்கள், நண்பர்களுக்கு. மற்றொரு பங்கு வசதி குறைந்தவர்களுக்கு. அல்லது அனைத்தையும் ஏழைகளுக்கும் கொடுத்துவிடலாம்.
நிருபர்: அய்னுன்நிசா