உடலிலிருந்து காற்றின் வெளியேற்றம் - ஏன் சத்தம்? எதனால் துர்நாற்றம்?
அதிகமான காற்று மலக் குடலில் தேங்கியிருந்து வெளியேறினாலும் சத்தம் அதிகமாக இருக்கும்.
நம்மில் பலர் ஒப்புக்கொள்ளத் தயங்குவோம்.
ஆனால் உடலிலிருந்து காற்று வெளியேறுவது, ஏப்பம்விடுவது ஆகியவை இயல்பான ஒன்று.
இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி ஆளின் உடலிலிருந்து ஐந்திலிருந்து 15 முறை காற்று வெளியேறும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை கூறுகிறது.
ஆனால் அவ்வாறு வெளியேறும் காற்று சிலரிடையே அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
மற்ற சிலரிடமோ அதிக சத்தம் ஏற்படும்.
இவற்றுக்குக் காரணம் என்ன?
உடலிலிருந்து காற்று வெளியேறுவதற்குக் காரணம் என்ன?
- பெருங்குடலிலுள்ள செரிமானமாகாத உணவை அங்குள்ள கிருமிகள் புளித்துப்போகச் செய்யும். அவ்வேளையில் வாயு உருவாகும்.
- வேகமாக மூச்சு விடுவது, மெல்லுவது, நீண்ட நேரம் பேசுவது-ஆகியவற்றின்போது தொடர்ந்து அதிகக் காற்றை விழுங்குகிறோம்.
இந்தக் காற்று உடலிலிருந்து வெளியேறும்போது காற்றுவெளியேற்றம், ஏப்பம் ஏற்படுகிறது.
காற்றுவெளியேற்றத்திலுள்ள துர்நாற்றத்திற்குக் காரணம்?
காற்று வெளியேற்றத்தில் பிராணவாயு, கரியமிலவாயு, நைட்ரஜன், ஹைட்ரஜன், மீத்தேன், ஹைட்ரஜன் சல்ஃபைட் (nitrogen, hydrogen, methane, hydrogen sulphide) ஆகிய வாயுக்கள் அடங்கியுள்ளன.
அதில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள ஹைட்ரஜன் சல்ஃபைட் தான் துர்நாற்றத்திற்குக் காரணம்.
இந்த வாயு பெண்களிடம் அதிகமாய் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதோடு சல்ஃபர் அதிகமுள்ள முட்டை, இறைச்சி போன்ற உணவுகளைக் கூடுதலாகச் சாப்பிட்டாலும் காற்று துர்நாற்றத்தோடு வெளியேறும் சாத்தியம் அதிகம்.
மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றாலும் காற்று வெளியேற்றத்தில் துர்நாற்றம் வீசக்கூடும்.
காற்று வெளியேற்றம் சத்தமாக இருப்பது ஏன்?
காற்று மலக்குடல் வழியே உடலைவிட்டு வெளியேறுகிறது.
மலக் குடலிலிருக்கும் sphincter தசைகள் அதிக இறுக்கமாக இருந்தாலோ அதன் வழி அதிகக் காற்று வெளியேறினாலோ அதிக சத்தம் உண்டாகும்.
அதிகமான காற்று மலக் குடலில் தேங்கியிருந்து வெளியேறினாலும் சத்தம் அதிகமாக இருக்கும்.