கண்ணாடி... முகம் காட்டுவதற்கு மட்டுமல்ல
ஒருவருக்குள் இருக்கும் அச்சத்தைக் கண்ணாடி முன் நின்று வெளிப்படுத்தும்போது கோபமும் மனவுளைச்சலும் குறையக்கூடும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
பெரும்பாலும் முகம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடி இப்போது மருத்துவரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மூளையை ஏமாற்றினால், உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளையை எப்படி ஏமாற்றுவது?
கை, கால் போன்ற உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கான பயிற்சிகளில், கண்ணாடி மூளையை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இப்போது மெய்நிகர் காட்சிகளோடு பயன்படுத்தப்படும் கண்ணாடியில் அகற்றப்பட்ட உடலுறுப்புகள் அசைவது போன்ற பிம்பம் உருவாகிறது...
அதனைப் பார்ப்போருக்கு, உடல் உறுப்பு அகற்றப்பட்டதால் உருவாகும் வலி குறைகிறதாம்.
கண்ணாடி சிகிச்சைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆய்வுகளில் இப்போது அறிவியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒருசிலர் எடை கூடியிருக்கிறதோ என்று வெகுநேரம் அப்படியும் இப்படியும் திரும்பிக் கண்ணாடியில் பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பர்.
சிலருக்கோ, கண்ணாடியைப் பார்க்கப் பார்க்க உடலில் உள்ள குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரியும்.
அதனால், உடல் எடையைக் குறைக்கப் போகிறேன் என்று முறையற்ற உணவுப் பழக்கத்தைப் பின்பற்றிப் பிரச்சினையில் சிக்கிக்கொள்வர்.
தங்களைத் தாங்களே சாடிக் கொள்வர்.
ஒருவகையான மன அழுத்தத்துக்கும் ஆளாவர்.
இப்படி, உடல் குறித்த தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், "mirror exposure" எனும் கண்ணாடி சிகிச்சை உதவுகிறதாம்!
உடல் எடை குறித்த தவறான எண்ணங்களால் அவதியுறுவோரை, மனநல வல்லுநர்கள் கண்ணாடி முன்னால் நிற்கச் சொல்வர்.
பின்னர் தங்களின் உடல்பாகங்களைச் சிலை வடிவமைக்கும் ஒருவரிடம் வருணிப்பதுபோல அவர்கள் எடுத்துக்கூற வேண்டும்.
நல்ல அம்சங்களை மட்டுமே கண்ணாடியைப் பார்த்துக் கூற வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
இதுபோன்ற சிகிச்சைகளால், ஒருவர் தமது உடல் குறித்த கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்குள் இருக்கும் அச்சத்தைக் கண்ணாடி முன் நின்று வெளிப்படுத்தும்போது கோபமும் மனவுளைச்சலும் குறையக்கூடும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
- Faure, Limballe and Kerhervé,kids.frontiersin.org,www.psychologytoday.com