ஓய்வுகாலத்தை உல்லாசமாகச் செலவழிக்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
முதுமைக் காலத்தில் நன்றாகக் காலைநீட்டி ஓய்வெடுக்கும் ஆசை. ஆனால் உங்கள் ஓய்வுகாலத்திற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா?
சுமார் 25 வயதிலிருந்து 65 வயதுவரை நம்மில் பலர் நமது வாழ்க்கையின் பெரும்பங்கைப் பணம் ஈட்டச் செலவிடுகிறோம்.
இவை அனைத்தும் முதுமைக் காலத்தில் நன்றாகக் காலைநீட்டி ஓய்வெடுக்கும் ஆசையுடன்.
ஆனால் உங்கள் ஓய்வுகாலத்திற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா?
ஒவ்வொருவரும் ஓய்வுகாலத் திட்டத்தில் நினைவுகொள்ள வேண்டியவை:
1. ஓய்வுகாலத்தை எப்படிச் செலவழிக்க விரும்புகிறீர்கள்?
உங்கள் ஓய்வுகாலத்தை நீங்கள் எப்படிக் கற்பனை செய்கிறீர்கள்?
உங்கள் ஓய்வுகாலத்தை எப்படிக் கற்பனை செய்கிறீர்களோ அதற்கேற்ப பணத்தைச் சேமிப்பது அவசியம்.
குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு ஓய்வுகாலத்தில் அதிகப் பணம் தேவைப்படாது.
ஆனால் வேலை செய்யும் காலத்தில் நேரமின்மையால் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள சிலர் விரும்பலாம்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பலாம்.
அல்லது ஆடம்பரமாகச் செலவு செய்து பழகியிருக்கலாம்.
இத்தகையோர் அதற்கேற்ப திட்டமிட்டு ஓய்வுகாலத்திற்கு அதிகப் பணம் ஒதுக்கிவைப்பது அவசியம்.
2. கூடிய விரைவாகப் பணம் சேமிப்பது அவசியம்
நாளை தொடங்கலாம் என்ற மனப்போக்கு மனித இயல்பு.
ஆனால் ஓய்வுகாலத்திற்குச் சேமிக்கும்போது இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிள்ளை வளர்ப்பு, வீடு வாங்குவது என்று பல காரணங்கள் பணச் சேமிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம்.
ஆனால் சிறுதொகையாக இருந்தாலும் இப்போதே சேமிக்க ஆரம்பித்தால் அது ஓய்வுகாலத்தில் பெரிதும் உதவும்.
3. மாற்றங்களை எதிர்பார்த்துத் திட்டமிடுங்கள்!
வாழ்க்கை நாம் எதிர்பார்த்தவாறே செல்லாது.
திடீரென்று நமது வேலையை இழக்க நேரிடலாம்.
உடல்நலம் பாதிக்கப்படலாம்.
ஓய்வுகாலத்திற்குச் சீக்கிரம் திட்டமிடுவது எதிர்வரும் எதிர்பாரா மாற்றங்களைச் சமாளிக்க உதவும்.
4. நீண்ட ஓய்வுகாலத்திற்குத் திட்டமிடுங்கள்
மனிதனின் ஆயுட்காலம் நீடித்துள்ளது.
இதனால் நீங்கள் ஓய்வுகாலத்திற்காக ஒதுக்கிவைத்திருக்கும் பணம் 30 ஆண்டுகள் வரைகூட நீடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.