ஆழ்ந்த நித்திரையைப் பெறுவதில் சிரமமா? - அதை உடனடியாகச் சரி செய்வது முக்கியம்: மருத்துவர்கள்
அனைத்துலக நித்திரை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தினம் எடுத்துக்கூறுகிறது.
(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)
அனைத்துலக நித்திரை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தினம் எடுத்துக்கூறுகிறது.
அதே நேரத்தில் தூக்கம் தொடர்பான முக்கிய விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்துவதும் இன்றைய தினத்தின் நோக்கம்.
மருந்து, கல்வி, சமூக அம்சங்கள், வாகனமோட்டுவது ஆகியவை உறக்கத்தின் மீது கொண்டுள்ள தாக்கம் ஆராயப்படும்.
தூக்கக் குறைபாடுகளை முறையாகச் சமாளித்து, அவற்றைத் தடுப்பது முக்கிய நோக்கம்.
நம்மில் பலர் தூக்கம் என்றால் உடல் சோர்வைப் போக்குவது பற்றி மட்டும் நினைக்கிறோம்.
ஆனால் ஒழுங்கான தூக்கம் இல்லாமல் போவதால் மற்ற பல பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார் இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் தூக்க நிபுணராகப் பணிபுரியும் டாக்டர் சுவா அய் பிங் (Chua Ai Ping).
இருதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது தூக்கமின்மை. தூக்கம் பாதிப்படையும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தூக்கம் பாதிப்படையும்போது atherosclerosis ஏற்படக்கூடும் என்றார் டாக்டர் சுவா. அவ்வாறு ஏற்படும்போது இரத்தக்குழாய்கள் குறுகலாகிக் கெட்டியாகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.
ஒழுங்காகத் தூங்கச் சிரமப்படுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. போதிய தூக்கம் கிடைக்காதபோது நமது உடலால் மனவுளைச்சலைச் சீர்படுத்தும் சுரப்பிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
அது மட்டுமல்லாமல் போதிய தூக்கம் இல்லாமல் போகும்போது பசியை உண்டாக்கும் சுரப்பிகளும் சீராக இயங்குவதில்லை.
இதனால் அதிக அளவு பசியும் ஏற்படக்கூடும் என்று கூறினார் டாக்டர் சுவா.
சிலர் வயதாக ஆக தூங்க இயலாமல் சிரமப்படுவது இயல்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் தூக்கக் குறைபாடுகள் இருப்பதால் இவர்கள் தூங்கச் சிரமப்படுகிறார்கள்.
முறையான பரிசோதனைகளுக்குச் சென்று ஒழுங்கான தூக்கத்தைப் பெறும்படி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் சுவா.