கடந்த 3 ஆண்டுகளில் பிறந்த கிட்டத்தட்ட அனைத்து எம்பரர் பெங்குவின்களும் மாண்டன: ஆய்வாளர்கள்
உலகின் இரண்டாம் ஆகப் பெரிய பெங்குவின் கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறந்த குஞ்சுகளில் கிட்டத்தட்ட அனைத்தும் மாண்டு விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
உலகின் இரண்டாம் ஆகப் பெரிய பெங்குவின் கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறந்த குஞ்சுகளில் கிட்டத்தட்ட அனைத்தும் மாண்டு விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'Emperor' இன பெங்குவின்களாகிய அவை, அண்டார்ட்டிக்காவில் வசிக்கும் இடம் சுருங்கிக்கொண்டே வருவதால் அந்தக் குஞ்சுகள் மாண்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹாலி பே (Halley Bay) எனும் அந்தக் கூட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் 25,000 பெங்குவின் ஜோடிகள் வரை இனப்பெருக்கம் செய்யும்.
ஆனால் 2016இல் வழக்கத்தைவிட அதிக வெப்பம் உண்டானதால் பெங்குவின்கள் தங்களது குஞ்சுகளை வளர்க்கும் பனிப்பாளம் உடைந்தது.
அதில் கிட்டத்தட்ட அனைத்துக் குஞ்சுகளும் மாண்டன. 2017இலும் 2018இலும் அதே போல நடந்தது.
அதனைத் தொடர்ந்து பெங்குவின் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
பூமியில் வெப்பம் அதிகரித்து வருவதால், இந்த நூற்றாண்டு இறுதிக்குள் 'Emperor' பெங்குவின்களின் எண்ணிக்கை 70 விழுக்காடுவரை குறையும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஆகவே அவற்றை அருகிவரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று 2015இல் வெளியிடப்பட்ட ஆய்வு வலியுறுத்தியது.