காலை எழுந்தவுடன் காப்பியா? இது உங்களுக்கு...
“காலையில் எழுந்தவுடன் முதலில் காப்பி குடித்தால்தான் வேலை நடக்கும்.”- இப்படி நம்மிடையே இருக்கும் பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)
“காலையில் எழுந்தவுடன் முதலில் காப்பி குடித்தால்தான் வேலை நடக்கும்.”- இப்படி நம்மிடையே இருக்கும் பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
“Bed Coffee” என்ற பெயரில் படுக்கையிலேயே காப்பி குடிப்பவர்களும் உண்டு.
காப்பியில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்பது பலரும் அறிந்ததே. ஆனால் வெறும் வயிற்றில் காப்பி குடிப்பது பல கேடுகளை விளைவிக்கும் என்கின்றனர், மருத்துவர்களும் ஆய்வாளர்களும்.
7, 8 மணிநேரத் தூக்கத்துக்குப் பின் விழித்து எழும்போது, வயிற்றில் செரிமானத்துக்கு உதவும் திரவங்கள் சுரந்து தயாராய் இருக்குமாம். அதில் அமிலத்தன்மை அதிகம். அது Hydrochloric acid எனப்படுகிறது.
காலை எழுந்தவுடன் காப்பியை அருந்தும்போது, அது அமிலத்துடன் கலந்து, வயிற்றின் விளிம்பில் உள்ள மெல்லிய தோல் பகுதியை அரிக்கத் தொடங்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை....தொடர்ந்து இதைச் செய்து கொண்டிருந்தால், மேலும் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.
குறிப்பாக உடலில் அமிலத்தன்மை அதிகமாகி அவதிப்படுவோருக்கு இது பெரும் கெடுதலை ஏற்படுத்தும்.
சிலருக்குக் காலப்போக்கில், நடுக்கம், மனநிலை மாற்றம், பரபரப்பு, எரிச்சல், படபடப்பு போன்றவையும் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒன்றில் கூர்ந்து கவனம் செலுத்தும் தன்மையும் குறையும் என்று கூறப்படுகிறது.
சிலருக்குக் காப்பி இல்லாவிட்டால் முடியாது என்ற அளவுக்குக் காப்பிக்கு அடிமையாகும் நிலை கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதே சமயம் பிற்பகல் நேரத்துக்குப் பின் காப்பி குடிப்பதும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மை, கவனக்குறைவு, படபடப்பு போன்றவை மாலைக் காப்பியால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“அப்படியென்றால் எப்போது தான் காப்பி குடிப்பது?” என்கிறீர்களா?
காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை காப்பி குடிக்க உகந்த நேரம் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரை !