அமைதி நிலையைப் பெறுவது எப்படி
நம்மில் பலரும் பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து வருகிறோம். நோய்த்தொற்று அதிகம் தலைதூக்கியுள்ள காலத்தில் வாழும் நமக்கு சில நேரங்களில் நிம்மதியும் மன அமைதியும் தேவைப்படுகின்றன
நம்மில் பலரும் பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து வருகிறோம். நோய்த்தொற்று அதிகம் தலைதூக்கியுள்ள காலத்தில் வாழும் நமக்கு சில நேரங்களில் நிம்மதியும் மன அமைதியும் தேவைப்படுகின்றன.
10 நிமிட மௌனம்
ஒவ்வொரு நாளும் நாம் பலரிடம் பேசுவது அவசியமாகிறது. நாள்தோறும் பிறரிடம் பேசுவதால் உள்ளம் களைப்படைகிறது. சில வேளைகளில், மனம் பாதிப்படையலாம், அமைதியை இழக்க நேரலாம்.
நாள்தோறும் குறைந்தபட்சம் 10 நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம். அவ்வாறு செய்வதால், ஒருவர் தம்மை நிலைப்படுத்துகிறார்.
அதனால் அவர் அன்றைய நாளில் நிகழ்ந்த அனைத்தைப் பற்றியும், அமைதியாகவும், தெளிவாகவும் யோசிக்கலாம்.
அந்த மௌனத்தைக் கடைப்பிடிக்கத் தற்போது பல்வேறு செயலிகளும் உதவுகின்றன.
அமைதியை உண்டாக்கும் உடற்பயிற்சிகள்
பழமையான யோகாசனப் பயிற்சி நம்மிடையே பிரபலம் அடைந்துள்ளது. அதைச் செய்வோருக்கு அமைதியும் உடல் பலமும் ஏற்படும்.
2. மூச்சுப் பயிற்சிகள்
மன அழுத்தம், மனவுளைச்சல், நிம்மதியின்மை, சோகம், சோர்வு , வேதனை போன்ற மன ரீதியான பிரச்சினைகளுக்கு உதவியாய் அமைவது மூச்சுப் பயிற்சி.
"Just Breathe" என்ற பிரபல ஆங்கில வரி நம்மில் பலருக்கும் நன்கு அறிமுகமானது.
அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுவது கேட்பதற்குச் சுலபமாக இருந்தாலும், சரிவரச் செய்யப் பயிற்சி தேவை.
அதை நீண்ட நேரம் செய்யும்போது அதிக கவனமும் தேவைப்படும். அந்நேரம் மனத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும் என்பதால் அந்த எண்ணங்கள் மனத்தைவிட்டு விலக மூச்சுப்பயிற்சி வாய்ப்பளிக்கும்.
தனியாக மெதுவோட்டம் அல்லது நீண்ட பாதையில் நடைபோடுவது உடலை வலுப்படுத்துவதுடன் ஒருவருக்கு அமைதியையும் அளிக்கிறது.
தனியே அந்த உடற்பயிற்சிகளைச் செய்வதால் ஒருவருக்குத் தமது வாழ்க்கை, வாழ்க்கைத் தத்துவங்கள், போன்றவற்றை யோசிப்பதற்கு நேரம் கிடைக்கிறது.
இயற்கை இடங்களில் அந்தப் பயிற்சிகளைச் செய்வோர் இயற்கை அழகையும் ரசிக்கலாம்.
உணவே மருந்து
"எனக்குப் பிடித்ததை நான் உண்பேன், எனக்குச் சாப்பாடுதான் முக்கியம்" என்ற முழக்கவரி பரவிவரும் காலக்கட்டத்தில் "உணவே மருந்து" என்ற பழமொழியை நம்மில் பலரும் மறந்திருக்கலாம்.
இருப்பினும், சத்துள்ள உணவைச் சரியான அளவில், சரியான நேரத்தில் உண்பதால் உடலுக்கு மட்டுமல்ல, மனத்திற்கும் நன்மைகள் உண்டாகலாம்.
தவறான உணவுவகைகளையோ, அதிக அளவு உணவையோ உண்ணும் போது ஏற்படும் அஜீரணம் மனவுளைச்சலை அளிக்கும். அதைத் தவிர்ப்பதால், மனத்தில் அமைதி ஏற்படலாம்.
ஒரே நாளில், ஒவ்வொரு நாளும்
மௌன நேரம், உடற்பயிற்சி, சத்துள்ள உணவு உண்பது ஆகிய மூன்று அம்சங்களையும் நாள்தோறும் நாம் முறைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்வதால் மனத்தில் அமைதியைக் கொண்டுவரலாம்.
முயற்சி செய்வோம்.....