வாசனைத் திரவம்...சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா?
வாசனத் திரவம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
வாசனத் திரவம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
நாளெல்லாம் நறுமணத்தோடு திகழ வேண்டுமென விரும்பாதவர் யார் ?
சுகந்த வாசனை வீசும் மனிதர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆனந்தம்தான்.
ஆனால் விலையுயர்ந்த நறுமணத் திரவம் என்றாலும் அதைச் சரியான வகையில் பயன்படுத்துவது முக்கியம்.
வாசனைத் திரவத்தின் முழுமையான நறுமணத்தை வெளிக்கொணர சில வழிகள் இதோ...
1. வாசனைத் திரவத்தை வாங்கும் முன் சோதித்துப் பார்க்கவும்
வாசனைத் திரவத்தை வாங்கும் முன் அதை ஒருமுறை பூசிப்பார்க்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பின் நீடிக்கும் வாசனையே அதன் இயல்பான வாசனை. முதலில் தெளித்தவுடன் வெளிப்படும் நறுமணம் அதன் முழுமையான இயல்பல்ல. அதைமட்டுமே நம்பி வாங்கக்கூடாது. மேலும், அது உங்கள் உடலுக்குப் பொருந்துகிறதா என்பதும் முக்கியம். உடலின் இயற்கையான வாசனையோடு அது இணையவேண்டும். ஒருவருக்குப் பொருந்தும் வாசனைத் திரவம் மற்றொருவருக்குப் பொருந்தாமல் போகலாம்.
2. சரியான இடத்தில் வாசனைத் திரவத்தைப் பூச வேண்டும்
வாசனைத் திரவத்தைத் தெளிப்பதற்கெனச் சில இடங்கள் உண்டு.
மணிக்கட்டின் மேற்புறம், முழங்கையின் உள்மடிப்பு, காது மடல்களுக்குப் பின்-இவை பொதுவான இடங்கள். இவை தவிர, கழுத்தின் மேற்புறத்திலும் மார்பின் நடுப்பகுதியிலும்கூட வாசனைத் திரவத்தைத் தெளித்துக் கொண்டால், நறுமணம் நீண்ட நேரம் நீடிக்கும்.
3. வாசனைத் திரவத்தைப் பூசியதும் அதைத் தேய்க்கக் கூடாது
கைகளில் வாசனைத் திரவத்தைப் பூசியபின் அந்த இடத்தைக் கைகளால் தேய்க்கும் பழக்கத்தினால் வாசனைத் திரவத்தின் மணம் நீடிக்கும் நேரம் பாதிக்கப்படும். உராய்வின்போது உருவாகும் வெப்பம்கூட, நறுமணத் திரவத்தின் இயல்பைக் கெடுத்துவிடுமாம். பதிலாக அதை மெல்லத் தொட்டு வைக்கலாம்.
4. ஆடைகளில் வாசனைத் திரவத்தைத் தெளித்துக்கொள்ளலாம்
உடல் வியர்வையும் வாசனைத் திரவமும் சேர்ந்தால் நல்ல வாசனை வராது. ஆகவே, நீண்ட நேரம் வெயிலில் அலைய வேண்டியிருந்தால், வாசனைத் திரவத்தை உடலில் பூசக்கூடாது. மாறாக அதை நமது ஆடையில் தெளித்துக் கொள்ளலாம். அடர்த்தியான வாசனைத் திரவம், ஆடையில் கறையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே, கவனம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், வாசனைத் திரவத்தைத் தெளித்துவிட்டு உடனடியாக அது நமது ஆடைமேல் படுமாறு மோதி நடந்து சென்று வாசனையை ஆடையில் படியவைக்கலாம்.
5. வாசனைத் திரவத்தைக் கழிப்பறையில் வைக்கக்கூடாது
வாசனைத் திரவங்களின் மூலப் பொருள்கள் வெப்பம், ஈரத்தன்மை, வெளிச்சத்தினால் பாதிக்கப்படலாம். அதனால் அவற்றைக் கழிப்பறையில் வைப்பதற்கு பதிலாக அலமாரி ஒன்றில் வைத்திருப்பது நன்று.