சாம்சுங் கேலக்சி நோட் 7 திறன்பேசிகள் தீப்பற்றியதற்குப் பழுதடைந்த மின்கலங்கள் காரணம்
சாம்சுங் கேலக்சி நோட் 7 திறன்பேசிகள் தீப்பற்றியதற்குப் பழுதடைந்த மின்கலன்கள் காரணம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
சாம்சுங் கேலக்சி நோட் 7 திறன்பேசிகள் தீப்பற்றியதற்குப் பழுதடைந்த மின்கலன்கள் காரணம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து திறன்பேசிகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த நிறுவனம் உறுதியளித்தது.
அதன் காரணமாக, ஆகப் புதிய கேலக்சி S ரகத் திறன்பேசியின் வெளியீடு தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நோட் 7க்குப் பிறகு இவ்வாண்டு கேலக்சி S8 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு திறன்பேசிகள் இனி தீப்பற்றாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாம்சுங் கைபேசி நிறுவனத் தலைவர் கொ டொங்-ஜின் கூறினார்.
புதிய திறன்பேசி எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தீப்பற்றக்கூடிய தன்மை கொண்ட நோட் 7 திறன்பேசிகளை மீட்டுக்கொண்ட சாம்சுங், வாடிக்கையாளர்களுக்கு மாற்றுக் கருவிகளை வழங்கியது.
ஆனால் மாற்றுக் கருவிகளும் தீப்பற்றியதாகத் தகவல்கள் வந்தன.
வெளியீடு கண்ட 2 மாதத்துக்குள்ளாக அக்டோபரில் அந்தத் திறன்பேசிகள் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், சாம்சுங் குழுமம் மீதான விசாரணையை முடித்த பிறகு மற்ற வர்த்தகக் குழுக்களை விசாரிக்கத் திட்டமுள்ளதாக தென் கொரியாவின் சிறப்பு அரசாங்க வழக்குரைஞரின் அலுவலகம் கூறியுள்ளது.
அந்நாட்டின் அதிபர் திருவாட்டி பார்க் குவென் ஹே தொடர்பான ஊழல் சர்ச்சையில் சாம்சுங் குழுமத்தின் தலைவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டார்.
சாம்சுங் மீதான விசாரணை எப்போது முடியும், எந்தெந்த வர்த்தகக் குழுக்கள் விசாரிக்கப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.