கிருமித்தொற்றைத் தடுக்க கைகளைக் கழுவினால் மட்டும் போதாது; முறையாக உலர வைப்பதும் முக்கியம்
COVID-19 கிருமி குறித்த ஆய்வில் கைகளைக் கழுவிய பின்னர் முறையாக உலர வைப்பதும் முக்கியம் என்று தெரியவந்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
COVID-19 கிருமி குறித்த ஆய்வில் கைகளைக் கழுவிய பின்னர் முறையாக உலர வைப்பதும் முக்கியம் என்று தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் சூடான காற்றைக் கொண்டு கைகளை உலர வைக்கும் hand dryer சாதனங்களைப் பயன்படுத்துவதும், துணியாலான துண்டுகளைப் பயன்படுத்துவதும் கூட சரியில்லையாம்.
பிரிட்டனின் Swansea பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அவ்வாறு கூறுகின்றனர்.
உலகெங்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அன்றாடம் அதிகரிக்கும் வேளையில், உலக சுகாதார நிறுவனம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும்படி அனைவருக்கும் அறுவுறுத்தியுள்ளது.
அதற்கு, கைகளைச் சுத்தம் செய்யும் கிருமிநாசினித் திரவத்தையோ, சவர்க்காரமும், தண்ணீரும் கலந்தோ பயன்படுத்தலாம்.
முறையாகக் கைகளைக் கழுவினால் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்பது நம்பிக்கை.
20 விநாடிகளுக்குக் குறையாமல் கைகளைக் கழுவவேண்டும்.
ஆனால் அதன் பிறகு கைகளை உலர வைப்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.
உலர வைப்பதால் கைகளிலிருந்து ஈரம் போவதுடன், நுண்ணுயிரிகள் பரவுவதையும் அது தடுக்கிறது.
உலர்ந்த தோலைவிட ஈரமான தோலிலிருந்துதான் நுண்ணுயிரிகள் அதிகம் பரவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இருப்பினும், எவ்வாறு உலர வைக்கிறீர்கள் என்பதும் முக்கியம்.
குறிப்பாக மருத்துவமனைகள், அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவற்றில் அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அங்கெல்லாம் சூடான காற்றின் மூலம் உலர வைக்கும் சாதனங்கள் சுற்றுப்புறத்தில் கிருமியைப் பரப்பும் அபாயமுண்டு.
ஒருமுறை மட்டும் பயன்படும் டிஷ்யூ தாளைக் கொண்டு உலர வைப்பதுதான் சாலச் சிறந்ததாம்.
எல்லா இடங்களுக்கும் அது பொருந்தும்.