தளர்த்தப்பட்ட முடக்கநிலை: கடைத்தொகுதியில் நீங்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது ?
சிங்கப்பூரிலும் மற்ற பல நாடுகளிலும் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக அறிமுகமான முடக்கநிலை தளர்த்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரிலும் மற்ற பல நாடுகளிலும் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக அறிமுகமான முடக்கநிலை தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் மூடப்பட்டிருந்த கடைத்தொகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நீங்கள் கடைத்தொகுதிகளுக்குப் போகும்போது, கொரோனா நோய் தொற்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும் ?...
கண்டறிந்து பகிர்ந்தது Reader's Digest சஞ்சிகை.
1. முகக் கவசம் அணியவேண்டும்
நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு, வாய், கண்களினுள் நுழைவதைத் தடுக்க முகக் கவசம் முக்கியமான பாதுகாப்பு அம்சமாகத் திகழ்கிறது.
2. பிறரைத் தொடாதீர்கள்
நீங்கள் பலரோடு நட்புடன் பழகுபவராக இருந்தாலுங்கூட, அவர்களைத் தொட்டுப் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள்!
கை குலுக்குதல், 'high-5' எனப்படும் இருகை மோதல்-ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம், மற்றவர்களிடம் உள்ள கிருமிகள் நம்மிடம் பரவாமலிருக்கும்; நம்மிடம் உள்ள கிருமிகளும் மற்றவர்களுக்குப் பரவ மாட்டா.
3. கடைகளில் நீண்ட நேரம் இருக்காதீர்கள்
மூடப்பட்ட சுற்றுப்புறம் கொண்ட, காற்றோட்டமில்லாத கடைகளில், கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.
மேலும், பலரும் கடைகளில் இருப்பதால், அவர்களிடம் இருந்து நோய் பரவும் வாய்ப்பு இயல்பாகவே அதிகரிக்கிறது.
4. உடனடியாக நீங்கள் வாங்கிய பொருள்களைப் பயன்படுத்தாதீர்கள்
கடையிலிருந்து வாங்கப்படும் பொருள்களின்மீது கிருமிகள் படிந்திருக்கலாம். அவற்றை வாங்கியவுடன் பயன்படுத்தாமல், ஓர் ஓரமாக வைத்துவிடுங்கள். கொரோனா நோய்க்கிருமியால் நீண்டநேரம் மனித உடலுக்கு வெளியே உயிர்வாழமுடியாது.
5. கட்டண அட்டையைப் பயன்படுத்துங்கள்
உங்களால் முடிந்தவரை கட்டண அட்டையைக் கொண்டு நீங்கள் வாங்கிய பொருள்களுக்குப் பணம் செலுத்துங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், மற்றவர்கள் தொட்ட பணத்தைத் தொடுவதைத் தவிர்க்கலாம். அதன் பின், கைகளைக் கழுவுங்கள்.
6. இரவு நேரத்தில் கடைத்தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்
இரவு நேரத்தில் பலரும் கடைத்தொகுதிகளில் சுற்றிவருவர். கிருமி பரவ அது சிறந்த வாய்ப்பளிக்கும். அதனைத் தடுக்க, நீங்கள் அந்த நேரத்தில் அங்கு செல்வதைத் தவிர்க்கவேண்டும். கடைத்தொகுதிகள், காலையில் திறந்தவுடன் அங்கு சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும்.