காற்று...
நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பது.
உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது .
அத்தகைய மகத்தான காற்றுக்குப் பல பெயர்கள். அந்தப் பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா?
காற்று வீசும் திசையைக் கொண்டு நமது முன்னோர் அதற்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
தென்றல்
தெற்குத் திசையிலிருந்து வீசும் காற்று தென்றல். மென்மையாக இருக்கும் அதே வேளையில் மனத்திற்கும் மிகவும் இதமாக இருப்பது தென்றல் காற்றே.
வாடை
வடக்கிலிருந்து வீசும் காற்றுக்கு வாடை எனப் பெயர் சூட்டினர். ஊதைக் காற்று எனவும் இதனை அழைப்பர். வாடைக் காற்று குளிர்ச்சியாக இருக்கும். பெரும்பாலும் வாடைக் காற்றைத் துன்பமான சூழலுடன் தொடர்புபடுத்துவது வழக்கம்.
கொண்டல்
கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றுக்குப் பெயர் கொண்டல் காற்று. இதற்கு மழைக்காற்று என்ற மற்றொரு பெயரும் உண்டு.
கோடை
மேற்குத் திசையிலிருந்து வீசுவது கோடை. மேற்குத் திசையைக் குடக்கு என்றும் அழைப்பர். அதன் காரணமாகவே அது கோடைக் காற்று என அழைக்கப்படுகிறது. கோடைக் காற்று பொதுவாக வெப்பமாக இருக்கும்.
அடுத்த முறை காற்று வீசும்போது அதன் பெயர் என்னவாக இருக்கும் என நீங்கள் சுலபமாகச் சொல்லிவிடலாம்.