விடுமுறை.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தருணம். பள்ளிப் பருவத்திலிருந்தே தித்திப்பூட்டும் ஒரு சொல்.
ஜூன், டிசம்பர் மாதங்கள் என்றாலே மாணவர்களுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி ஒரு தனி மகிழ்ச்சி. வேலை செய்பவர்கள், அவரவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விடுப்பு நாட்களை எடுத்துத்தான் விடுமுறைக்குச் செல்லமுடியும்.
வேலை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் விடுமுறை. விடுமுறை என்பது ஓய்வு எடுக்க மட்டும் அல்ல.
வாழ்க்கையை மேலும் அனுபவிக்க, பல்வேறு அம்சங்களைக் கற்றுக்கொள்ள விடுமுறைகள் கைகொடுக்கின்றன. குடும்பம், தனிமனித மேம்பாடு என்று பல வழிகளில் விடுமுறை நமக்குப் பயன் அளிக்கிறது.
குடும்பங்களுக்கு விடுமுறை மிகவும் அவசியம். பெற்றோருக்கு வேலை, பிள்ளைகளுக்குப் பள்ளி என்று காலம் வழக்கமாகச் சக்கரம் போல் வேகமாக உருண்டோடுகிறது.
விடுமுறையின்போது அந்த வழக்கமான செயல்கள் மாறுகின்றன. எந்த ஊருக்குச் செல்லலாம், எந்தெந்த புதிய நடவடிக்கைளில் ஈடுபடலாம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
அதனால் எண்ணங்களும் அனுபவங்களும் விரிவடைகின்றன. வீட்டிலுள்ள பிள்ளைகளையோ முதியவர்களையோ அழைத்துச் செல்லும்போது அவர்களும் புதிய அனுபவங்களைப் பெற நாம் வழி வகுக்கிறோம்.
அதன்மூலம் குடும்பப் பண்புகளை அனைவருக்கும் நினைவூட்டி வளர்க்க விடுமுறைகள் உதவுகின்றன. எனவே,விடுமுறை எடுத்து குடும்பத்தாருடன் சேர்ந்து ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது மிகவும் நல்லது.
விடுமுறை முடிந்து, பள்ளிக்கோ வேலைக்கோ மீண்டும் திரும்பும்போது ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது. புதிய சிந்தனைகளுடன் மேலும் சிறப்பாகச் செயல்பட முடிகிறது. விடுமுறையின் மூலம் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
உங்கள் அடுத்த விடுமுறைக்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களா?