குழந்தைகளுக்குத் தேவையா திறன்பேசி?
பிள்ளைகளை உலகிற்கு அறிமுகம் செய்வது பெற்றோர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரையும் பிள்ளைகள் பார்த்து வளர்கின்றனர். இதுதான் காலங்காலமாக நடந்துவருகிறது.
பிள்ளைகளை உலகிற்கு அறிமுகம் செய்வது பெற்றோர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரையும் பிள்ளைகள் பார்த்து வளர்கின்றனர். இதுதான் காலங்காலமாக நடந்துவருகிறது.
பிறரின் செயல்கள் பிள்ளைகள் மீது ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவையே குழந்தையின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிறது. ஆனால், சில காலமாகவே குழந்தைகளின் வாழ்க்கையில் ஓர் அம்சம் புகுந்துவிட்டது. அதுதான், திறன்பேசி...
பெரும்பாலான வேளைகளில் அதனைப் பெற்றோர் தெரிந்தே அறிமுகம் செய்கின்றனர். திறன்பேசித் திரையைப் பிள்ளை விளையாட்டாகத் தட்டுவது, பெற்றோருக்கு ஒரு வகை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பிள்ளைக்குத் திறன்பேசியைப் பயன்படுத்தத் தெரிகிறதே என்பதில் மகிழ்ச்சி. பிள்ளை அதில் சிறந்த பலவற்றைக் கற்றுக்கொள்ளும் எனும் நம்பிக்கை.
தவழும் வயதில், திறன்பேசியைத் திடமாகப் பிடித்துக்கொள்ளும் விநோதமான ஆற்றல் இக்காலப் பிள்ளைகளுக்கு இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். திறன்பேசித் திரையைக் கண்சிமிட்டாமல் பார்க்கின்றன குழந்தைகள். பேசக் கற்றுக்கொள்ளாத பிள்ளை, திறன்பேசியில் இருக்கும் கேமராவைக் கண்டதும் புன்னகைக்கிறது. இதைப் பார்ப்பவர்களுக்கும் ஆனந்தமே. காணொளிகள், பாடல்கள், விளையாட்டுகள், படங்கள் எனத் திரையில் புதிய உலகமே பிள்ளையின் கண்முன் வருகிறது.
பொது நிகழ்ச்சிகள், பொது இடங்கள், பொதுப் போக்குவரத்து எனப் பலவற்றில் பெரியவர்கள் பிள்ளைகளுடன் இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பிள்ளைகள் கூச்சல் போடாமல், அமைதியாக இருக்கவேண்டும் என்றே சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் விரும்புவர். அது பிள்ளைகளுடன் இருக்கும் பெரியவர்களுக்கு ஒரு வகை மனஉளைச்சல்தான்.
பிள்ளைக்கு உண்மையிலேயே திறன்பேசி அந்நேரத்தில் தேவைதானா என்ற கேள்வி எனக்குத் தோன்றியது.
எனக்குத் தெரிந்த, தெரியாத பல பெற்றோரிடம் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.
திறன்பேசியைக் கையில் கொடுக்கவேண்டாம் எனப் பெற்றோர் முடிவெடுத்தால் அதற்கும் அழுகின்றன குழந்தைகள்.
திறன்பேசிகள், கையடக்கச் சாதனங்கள் போன்றவற்றின் பயன்பாட்டில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இருப்பதையும் நாம் உணர்கிறோம். அதிக அளவிலான கதிரியக்கம், நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.