மாணவர்களை வேனில் ஏற்ற முயன்ற ஓட்டுநருக்குத் தீய நோக்கம் இல்லை: காவல்துறை
சிங்கப்பூரிலுள்ள அனைத்துலகப் பள்ளிகள் இரண்டு, அவற்றின் மாணவிகளை அறிமுகமற்றோர் தங்கள் வேனில் ஏற்ற முயன்ற சம்பவங்கள் குறித்துப் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிங்கப்பூரிலுள்ள அனைத்துலகப் பள்ளிகள் இரண்டு, அவற்றின் மாணவிகளை அறிமுகமற்றோர் தங்கள் வேனில் ஏற்ற முயன்ற சம்பவங்கள் குறித்துப் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆயினும், அந்தச் சம்பவங்களில் ஒன்றுடன் தொடர்பான வேன் ஓட்டுநர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாய்க் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த ஓட்டுநர் தவறான எண்ணத்தில் செய்லபடவில்லை என்றும் விசாரணையில் உதவி வருவதாகவும் காவல்துறையினர் கூறினர்.
சில நாட்கள் இடைவெளியில் இரு வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகளை அவர்கள் வெள்ளை-வேனில் ஏற்ற முயன்றது தெரியவந்தது.
Portsdown சாலையில் நேற்று நடந்து சென்ற மாணவியை அணுகிய சிலர் அவ்வாறு முயற்சி செய்ததாய், Tanglin Trust பள்ளியின் தலைமை நிர்வாகி தெரிவித்தார்.
அந்த மாணவி நேற்று பிற்பகல் பன்னிரண்டரை மணியளவில் ஒன்-நார்த் (One-north) நிலையத்திலிருந்து நடந்துசென்ற போது வெள்ளை வேன் ஒன்று அவரருகில் வந்துநின்றது.
அதில் இருந்தோர் மாணவியை வாகனத்தில் ஏறுமாறு வலியுறுத்தினர்.
மாணவி மறுத்ததைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதாய்க் கூறப்பட்டது.
மாணவி அங்கிருந்து விரைந்து ஓடிப் பள்ளி வளாகத்துக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாகத் தலைமை நிர்வாகி மின்னஞ்சலில் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டிருப்பதாய் அவர் கூறினார்.
இம்மாதம் 11ஆம் தேதி UWC South East Asia கல்லூரியும் அதேபோன்ற புகாரை அளித்திருந்தது.