வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக வேலை அனுமதி பெற முயன்றதாகச் சந்தேகம் - 18 பேர் கைது
வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக வேலை அனுமதி பெற முயன்றதாகச் சந்தேகம் - 18 பேர் கைது
சிங்கப்பூருக்கு, வெளிநாட்டவரைச் சட்டவிரோதமாக வேலைக்கு அழைத்து வர முயன்ற சந்தேகத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதிச் சீட்டுப் பெறுவதற்காக, சந்தேக நபர்கள் தவறான தகவல்கள் கொடுத்ததாக மனிதவள அமைச்சு சந்தேகிக்கிறது.
இம்மாதம் 14 ஆம் தேதி, தீவு முழுவதும் மனிதவள அமைச்சு நடத்திய அதிரடிச் சோதனையில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
22 இடங்களில் சுமார் 12 மணி நேரம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக வேலை அனுமதி சீட்டுப் பெற முயல்வதாகக் கிடைத்த தகவல் குறித்து, கடந்த ஜூலையில் விசாரணையைத் தொடங்கியதாக மனிதவள அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் சில போலி நிறுவனங்களை அமைத்து, அவற்றின் மூலம் வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதிச் சீட்டுப் பெற முயன்றது சில மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாக அமைச்சு கூறியது.
விசாரணை தொடர்கிறது.
-CNA/kg