இசைக் கச்சேரி நுழைவுச்சீட்டு மோசடியின் தொடர்பில் 18 வயது ஆடவர் கைது
இசைக் கச்சேரி நுழைவுச்சீட்டு மோசடியின் தொடர்பில் 18 வயது ஆடவர் ஒருவர் இவ்வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இசைக் கச்சேரி நுழைவுச்சீட்டு மோசடியின் தொடர்பில் 18 வயது ஆடவர் ஒருவர் இவ்வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெரோசெல் இணையத்தளத்தின் மூலம் இசைக் கச்சேரிகளுக்கு நுழைவுச்சீட்டுகளை விற்ற ஒருவரிடம் சிலர் வங்கிக் கணக்கின் மூலம் கட்டணம் செலுத்தியிருக்கின்றனர்.
பணம் செலுத்திய பின் நுழைவுச்சீட்டுகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அவர்கள் புகார் செய்ததாகக் காவல்துறை இன்று (ஏப்ரல் 18) தெரிவித்தது.
பிப்ரவரி 13க்கும் மார்ச் 2க்கும் இடையிலான காலக்கட்டத்தில் புகார்கள் வந்ததாகக் கூறப்பட்டது.
சந்தேக நபர் நேற்று வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் மொத்தம் 5,400 வெள்ளியை மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.