குரங்கம்மைத் தொற்று: சிங்கப்பூர்வாசிகள் ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
சிங்கப்பூரில் கடந்த வாரம் ஆடவர் ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிங்கப்பூரில் கடந்த வாரம் ஆடவர் ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் சிங்கப்பூர்வாசிகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக CNA செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு அமைச்சு பதிலளித்தது.
பிரிட்டன், இந்தியா, மலேசியா, அயர்லந்து, நைஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை மாலை நிலவரப்படி, அவர்கள் அனைவரிடமும் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
கடந்த மாதம் 28ஆம் தேதி, நைஜீரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 38 வயது ஆடவருக்குக் குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அரிய நோய் குரங்கம்மை.