கார்ப் பயணக் கட்டணத்துக்கு $50 கள்ள நோட்டைக் கொடுக்க முயன்ற ஆடவர் கைது
ஆடவர் ஒருவர், தனியார் வாடகைக் கார்ப் பயணக் கட்டணமாகப் போலியான 50 வெள்ளி நோட்டைக் கொடுக்க முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாசிப்பு நேரம்: 1 நிமிடம்
ஆடவர் ஒருவர், தனியார் வாடகைக் கார்ப் பயணக் கட்டணமாகப் போலியான 50 வெள்ளி நோட்டைக் கொடுக்க முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.
இம்மாதம் 12ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.
தமது பயணி, கள்ள நோட்டைக் கொடுத்தபோது அதில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததை உணர்ந்த பெண் வாகன ஓட்டுநர், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
பின்னர் அந்தப் பெண்மணி, அதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் செய்தார்.
திங்கள்கிழமை (பிப் 18) பிற்பகல் 2 மணியளவில் 25 வயது ஆடவரை, மார்சிலிங் ரைஸில் அதிகாரிகள் கைதுசெய்தனர்.
அவர், சில $100 கள்ள நோட்டுகள் வைத்திருந்ததைக் கண்ட காவல்துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த ஆடவரிடமிருந்து வண்ணப் பதிப்புச் சாதனம் (colour printer) ஒன்றையும் கைத்தொலைபேசி ஒன்றையும் கைப்பற்றினர்.
அந்த ஆடவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
கள்ள நோட்டுகளைத் தயாரித்தது உறுதியானால், அந்த ஆடவருக்கு 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.