பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவற்றின் மீதான மக்களின் புரிதல் மாற வேண்டும் : ACRES தலைமை நிர்வாகி கலைவண்ணன்
பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவற்றின் மீதான மக்களின் புரிதல் மாற வேண்டும் : ACRES தலைமை நிர்வாகி கலைவண்ணன்
பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன பற்றி மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்; அது மாற வேண்டும் என்று ACRES விலங்குநல அமைப்பு கூறியுள்ளது.
அண்மையில் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் மலைப் பாம்பு ஒன்றை பூச்சி ஒழிப்பு நிறுவன அதிகாரிகள் பிடித்தனர்.
அதிகாரிகள் பாம்பைக் கையாண்டவிதம் குறித்துக் கேள்விகள் எழுந்தன.
அதுபற்றி ACRES அமைப்பின் தலைமை நிர்வாகி கலைவண்ணனிடம் "செய்தி" கருத்து கேட்டது.
கதைகள், திரைப்படங்களில் பாம்புகள் நமக்கு எதிரிகளைப் போலச் சித்திரிக்கப்படுகின்றன
ஆனால் உண்மையில் அவை மிகவும் சாதுவானவை; நமது சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு (eco system) மிக முக்கியமானவை.
சிங்கப்பூரில் உள்ள சில பாம்பு வகைகள் நமது நகர்ப்புறக் காடுகளில் வாழ்ந்து வருகின்றன; எலிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள அவை உதவியாக இருப்பதாகத் திரு. கலை கூறினார்.
சிங்கப்பூரில் வனவிலங்குச் சட்டத்துக்கேற்ப அத்தகைய விலங்குகள் முறையாகக் கையாளப்படவேண்டும்.
பூச்சி ஒழிப்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக விலங்குகளைச் சரிவரக் கையாள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூரோங் வெஸ்ட் பகுதியில் மலைப் பாம்பைப் பூச்சி ஒழிப்பு நிறுவன அதிகாரிகள் பிடித்திருக்கத் தேவையில்லை.
ஒருவேளை வாடிக்கையாளரின் நெருக்குதலுக்கு அவர்கள் செவிசாய்த்திருக்கலாம்.
பொதுமக்கள் இதுபோன்ற நேரங்களில் பூச்சி ஒழிப்பு நிறுவனங்களுக்குப் பதிலாக
ACRES அல்லது தேசியப் பூங்காக் கழகத்தை அழைக்கவேண்டும் என்றார் திரு கலை.
நமக்கு வனவிலங்குகள் மீது பயம் இருக்கலாம்;அதற்காக அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாம்புகளைக் காண நேரிட்டால் என்ன செய்வது?
பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பாகத் தள்ளி நிற்க வேண்டும்.
பதற்றம் இல்லாமல் 2 அல்லது 3 மீட்டர் தள்ளிச் செல்லுங்கள்.
முடிந்தால் பாம்பைக் கைத்தொலைபேசி மூலம் படம் எடுத்து ACRES-க்கு அனுப்புங்கள்; அது பாம்பின் வகையைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும்.
அதிகாரிகள் வரும்வரை பாம்பின் அருகில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ளலாம்.
ACRES தொலைபேசி எண்: 97837782