'ஆனந்த பவன் உணவக ஊழியர்கள் 80 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்று என்பது பொய்த் தகவல்'
சிங்கப்பூரில் எண். 58 சிராங்கூன் ரோடு, பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள ஆனந்த பவன் உணவகங்களில் பணிபுரியும் 80 விழுக்காட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாய்ப் பரவிவரும் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் எண். 58 சிராங்கூன் ரோடு, பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள ஆனந்த பவன் உணவகங்களில் பணிபுரியும் 80 விழுக்காட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாய்ப் பரவிவரும் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களில், 30 விழுக்காட்டிற்கும் குறைவான ஊழியர்களுக்கே கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாக அந்த உணவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீரன் 'செய்தி'யிடம் கூறினார்.
சில வாரங்களாகவே, ஊழியர்களுக்கு வழக்கமான கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அப்போது, சிலருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதை அடுத்து, எண். 58 சிராங்கூன் ரோட்டிலும் பெருமாள் கோயில் எதிரிலும் உள்ள இரு கிளைகளும் இம்மாதம் 14ஆம் தேதி மூடப்பட்டன.
எண்.58 சிராங்கூன் ரோட்டில் உள்ள கிளை சென்ற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) திறக்கப்பட்டது.
பெருமாள் கோயில் எதிரே உள்ள கிளை இன்னும் மூடப்பட்டுள்ளதாகத் திரு. வீரன் தெரிவித்தார்.
அதற்கு முக்கியக் காரணம், ஊழியர்கள் பற்றாக்குறை என்று அவர் குறிப்பிட்டார். எனினும், தீபாவளிக்கு முன்பு, அந்தக் கிளையைத் திறப்பது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட கிளைகளில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஊழியர்களுக்குத் தொடர்ந்து வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு. வீரன் குறிப்பிட்டார்.