COVID-19 கிருமித்தொற்று: கைத்தொலைபேசிகளைத் துடைப்பதுண்டா?
COVID-19 கிருமித்தொற்று: கைத்தொலைபேசிகளைத் துடைப்பதுண்டா?
COVID-19 கிருமித்தொற்றிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கைத்தொலைபேசிகள் உட்பட அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களைச் சுத்தம் செய்துவைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை கூறுகிறது.
நீர்த்துளிகளின் மூலம் கிருமி பரவுவதால் கைத்தொலைபேசிகளை அவ்வப்போது சுத்தம் செய்வது முக்கியம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் ( Kenneth Mak) குறிப்பிட்டார்.
கிருமி காற்றின் மூலம் பரவுவதற்கான ஆதாரம் இல்லை என்றார் அவர்.
கிருமித்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதைப் பற்றிய பல தகவல்கள் பரவினாலும் கைகளைச் சவர்க்காரத்துடன் கழுவுவதே கிருமித்தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என்று திரு. மாக் கூறினார்.
அதே நேரம் எவற்றைத் தொடுகிறோம் என்பதையும் கவனிக்கவேண்டும்; சுவாசக்கவசத்தை அணிவதைவிட கைகளைக் கழுவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் மருத்துவரை நாடுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் தற்போது 50 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 8 பேர் தீவிரப் பாராமரிப்புப் பிரிவில் உள்ளனர்.