உடனுக்குடன் தயாரித்து விற்கப்படும் பானங்களிலும் சர்க்கரை அளவைக் குறிக்கும் ஒட்டுவில்லைகள் கட்டாயமாகலாம்
சிங்கப்பூரில், உடனுக்குடன் தயாரித்து விற்கப்படும் காப்பி, Bubble tea போன்ற பானங்களில் உள்ள சர்க்கரை அளவைக் குறிக்கும் ஒட்டுவில்லைகளும், விளம்பர விதிமுறைகளும் கட்டாயமாக்கப்படலாம்.
சிங்கப்பூரில், உடனுக்குடன் தயாரித்து விற்கப்படும் காப்பி, Bubble tea போன்ற பானங்களில் உள்ள சர்க்கரை அளவைக் குறிக்கும் ஒட்டுவில்லைகளும், விளம்பர விதிமுறைகளும் கட்டாயமாக்கப்படலாம்.
நீரிழிவு நோயைச் சமாளிக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாக அது அமையும்.
முன்கூட்டியே தயாரித்துப் பொட்டலமிடப்பட்ட பானங்களுக்கான விதிமுறைகளைச் சுகாதார அமைச்சு, சென்ற ஆண்டு அறிவித்திருந்தது.
அதன்படி, சர்க்கரை அதிகமுள்ள பானங்களில் அடங்கியுள்ள சத்துப்பொருள்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய வில்லைகளை ஒட்டுவது கட்டாயம்.
ஆரோக்கியமற்றவை என வரையறுக்கப்படும் பானங்களுக்கான விளம்பரங்களை அறவே தடை செய்வதும் அதில் அடங்கும்.
ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரில் 19,000 பேருக்குப் புதிதாக நீரிழிவு நோய் அடையாளம் காணப்படுகிறது.
சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நாடாளுமன்றத்தில் இன்று அந்தத் தகவலை வெளியிட்டார்.
சிங்கப்பூரர்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவில் மூன்றில் ஒரு பங்கு, பானங்களில் அடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே உடனுக்குடன் தயாரித்து விற்கப்படும் பானங்களுக்கும் விதிமுறைகளை விரிவுபடுத்துவது பற்றி அமைச்சு பரிசீலிப்பதாகத் திரு. அம்ரின் அமின் கூறினார். மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றார் அவர்.