சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் பற்றி தெரியாத சில தகவல்கள்
சிங்கப்பூரின் இந்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
சிங்கப்பூரின் இந்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
பொருள் சேவை வரி, கல்வி, பாதுகாப்பு தொடர்பான பல அம்சங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய இடம் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் பற்றித் தெரியாத சில தகவல்கள் இதோ...
1. சிங்கப்பூரின் நிதியாண்டு எப்போதுமே ஏப்ரல் மாதம்தான் தொடங்குமெனச் சொல்லமுடியாது.
1969 ஆண்டிற்கு முன்னர் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அது ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் (12 மாதங்கள்) வரை நடப்பில் இருக்கும்.
1968 ஆம் ஆண்டில் நிதியாண்டுக் காலத்தை மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1969 ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் 15 மாதங்கள் நடப்பில் இருந்தது.
2. செலவில் பற்றாக்குறை இருக்காது.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டத்தில் பற்றாக்குறை இருக்காது.
ஒரு திட்டத்தை அமல்படுத்த அது கடன் வாங்குவதில்லை. இருக்கும் நிதியைக் கொண்டு அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்படும். அது நிதி நிலைமையை சீராக்கும்.
சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் சமநிலையாகப் பராமரிக்க வேண்டும்.
3. வரவுசெலவுத் திட்டம் பற்றி மக்கள் கருத்துத் திரட்டு
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்கு முன் நிதியமைச்சும், கருத்தறியும் பிரிவான REACH- உம் இணைந்து மக்களிடம் அந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் பற்றிய கருத்துகளைக் கேட்டறியும்.
அந்தக் கருத்துத் திரட்டு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்படும்.
அவ்வாறு செய்வதன் மூலம் மக்கள், வரவுசெலவுத் திட்டத்தில் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என்பது REACH இன் நோக்கம்.
தகவல்கள்: நிதியமைச்சு