பிரதமரின் மூத்த மகனைக் கார் ஓட்டுநர் காணொளி எடுத்ததன் தொடர்பில் காவல்துறையில் புகார்
பிரதமர் லீ சியென் லூங்கின் மூத்த மகன் லி யிபிங்கைக் காணொளி எடுத்ததன் தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
பிரதமர் லீ சியென் லூங்கின் மூத்த மகன் லி யிபிங்கைக் காணொளி எடுத்ததன் தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திரு. லியின் அனுமதி இல்லாமலோ அவருக்குத் தெரியாமலோ காணொளிகள் எடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
31வயது தனியார் கார் ஓட்டுநர் திரு. லிக்குச் சவாரி தர முன்வந்தார்.
அந்த ஓட்டுநர், திரு. லியிடம் திரும்பத் திரும்ப அவரின் அடையாளம், வீட்டு முகவரி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்துக் கேட்டதாகக் காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
காவல்துறையினர் அந்தச் சம்பவம் குறித்து, ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.
திரு. லியின் குடும்பப் பின்னணி காரணமாக, ஓட்டுநர் அவரிடம் கேட்ட கேள்விகள், பாதுகாப்புக் குறித்த கவலையை எழுப்பியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.
அந்தச் சம்பவம் குறித்து, பிரதமர் லீ சியென் லூங் Facebookஇல் பதிவிட்டதாக வெளியான நிழற்படம் பற்றியும் காவல்துறை விசாரித்து வருகிறது.
அந்தப் படம் போலியானது என்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் தொடர்பில், 39வயது ஆடவர் ஒருவர் விசாரணையில் உதவி வருகிறார்.
காணொளி, போலி நிழற்பட விவகாரங்கள் குறித்துப் பிரதமர் அறிவார் என, பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்த விவகாரம் குறித்துப் பொதுமக்கள் காட்டிவரும் அக்கறைக்கு, அதில் திரு. லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.