பல நாள் 'ஒற்றைச் செருப்பு' களவாணி பிடிபட்டது!
மேல் மாடியில் வசிப்போரின் பூனை நான்காவது முறையாகக் கைவரிசையைக் காட்டுவதைக் கண்காணிப்புக் கேமரா பதிவுசெய்திருந்தது.
செங்காங்கில் வசிக்கும் அமிராவின் வீட்டு வாசலில் வைக்கப்படும் காலணிகளில் ஒன்று அடிக்கடி மர்மமாகக் காணாமற்போனது!
கடந்த ஆண்டு அமிரா குடும்பத்தாரின் விலை உயர்ந்த ஜோடிக் காலணிகளில் ஒன்று மட்டும் மாயமாக மறைந்தது.
சுத்தம் செய்யும்போது துப்புரவாளர் அதனைத் தள்ளிவிட்டிருக்கலாம் என அவர்களே சாக்குப்போக்கு சொல்லிக் கோபத்தைச் சாந்தப்படுத்திக் கொண்டனர்.
எனினும் பலநாள் திருடன் விடுவதாகத் தெரியவில்லை.
பின்னர் கண்காணிப்புக் கேமராவின் உதவியோடு மர்மத்துக்கான பதிலை அமிரா கண்டுபிடித்தார்.
தம்மிடம் முன்பு இருந்த பூனையின் காதல் ஜோடிதான் அதற்குக் காரணம்!
மேல் மாடியில் வசிப்போரின் பூனை நான்காவது முறையாகக் கைவரிசையைக் காட்டுவதைக் கண்காணிப்புக் கேமரா பதிவுசெய்திருந்தது.
அந்தக் காட்சியை அமிரா சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
பூனையின் உரிமையாளர்களிடமும் அவர் நடந்தவற்றைக் கூறியதாக
Mothership-இடம் தெரிவித்தார்.
பூனையின் கள்ளத்தனம் குறித்து அறிந்திருப்பதாகக் கூறியவர்கள், எங்கிருந்து காலணியை அது எடுத்துவருகிறது என்று தெரியாமல் திக்குமுக்காடியுள்ளனர்.
தம் காதல் ஜோடியைக் காணவில்லை என்பதற்காகப் பூனை தம்மைப் பழிவாங்குகிறது என்று அமிரா வேடிக்கையாகக் கூறினார்.