இணையம் வழி நடைபெறும் Smart China கண்காட்சி - முதல் நாளன்று 17 ஒப்பந்தங்கள் உறுதி
இணையம் வழி நடைபெறும் Smart China கண்காட்சியின் முதல் நாளான நேற்று, 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இணையம் வழி நடைபெறும் Smart China கண்காட்சியின் முதல் நாளான நேற்று, 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முதன் முறையாக, அந்தக் கண்காட்சியின் இணை-ஏற்பாட்டாளராக சிங்கப்பூர் பொறுப்பேற்றுள்ளது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் வழிநடத்தும் அந்தக் கண்காட்சியில், 32 சிங்கப்பூர் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
அறிவார்ந்த நகரங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு, பொருள் விநியோகத் துறைக்கான நிதிக் கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்புத் துறைக்கான தகவல் சேகரிப்புத் தொழில்நுட்பம், வேலை தேடுவோருக்குப் பொருத்தமான வேலைகளைத் தெரிவுசெய்து தரும் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் அந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சீனா, தென் கிழக்காசியா போன்ற பெரிய சந்தைகளில் புதிய பங்காளித்துவ முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அந்தக் கண்காட்சி உதவும் என்பது பங்கேற்கும் நிறுவனங்களின் நம்பிக்கை.
இணையக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo), கிருமிப் பரவல், சிங்கப்பூரின் மின்னிலக்க வர்த்தகத்தையும், தொடர்புக் கட்டமைப்பையும் துரிதமாய் வளர்ப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
சிங்கப்பூருக்கும், சீனாவுக்கும் இடையே கடந்தாண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட தனிப்பட்ட தரவுத் தளத்தின் மூலம் கண்காட்சி நேரலையாக நடைபெறுகிறது.