சீனப் புத்தாண்டு அலங்காரங்களில் மிளிரும் பேருந்துகள், ரயில்கள் (படங்கள்)
சீனப் புத்தாண்டையொட்டி இன்று முதல் ரயில்கள், பேருந்துகளில் சிறப்பு அலங்காரங்கள் இடம்பெறுகின்றன..
சீனப் புத்தாண்டையொட்டி இன்று முதல் ரயில்கள், பேருந்துகளில் சிறப்பு அலங்காரங்கள் இடம்பெறுகின்றன.
அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்து ரயில் பாதைகளிலும் சீனப் புத்தாண்டு அலங்காரங்களைக் கொண்ட ரயில்கள் சேவையில் இருக்கும் என்று SMRT நிறுவனமும், SBS Transit நிறுவனமும் தெரிவித்தன.
(படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்)
சீன நாள்காட்டியில் இடம்பெறும் விலங்குகள், மலர்கள், தங்கக் கட்டிகள் போன்றவற்றைச் சித்திரிக்கும் வகையில் ரயில்களிலும், பேருந்துகளிலும் அலங்காரங்கள் இடம்பெற்றிருக்கும்.
பயணிகளிடம் கொண்டாட்ட உணர்வைத் தூண்ட அவை உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
அடுத்த வாரத்திலிருந்து, படிப்படியாக 8 பேருந்துச் சேவைகளில் சீனப் புத்தாண்டு அலங்காரங்கள் இடம்பெறும்.
சைனாடவுன் (Chinatown), தோ பாயோ (Toa Payoh), செங்காங் (Sengkang), ஜூரோங் ஈஸ்ட் (Jurong East), கிளமெண்டி (Clementi) போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அவை.
கிளார்க் கீ (Clarke Quay) , டோபி காட் (Dhoby Ghaut) ரயில் நிலையங்களிலும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான அலங்காரங்களில் மிளிர்கின்றன.
ரயில்களுக்கான அலங்காரங்கள் கிரேத்தா ஆயர் - கிம் செங் (Kreta Ayer-Kim Seng) குடியிருப்பாளர் ஆலோசனைக் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.