கான்கிரீட் கற்களில் சிகரெட் பெட்டிகளைப் பதுக்கிக் கடத்தும் முயற்சியில் ஆடவர் கைது
12,400க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளைக் கான்கிரீட் கற்களில் பதுக்கிக் கடத்த முயன்ற 25 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர்: 12,400க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளைக் கான்கிரீட் கற்களில் பதுக்கிக் கடத்த முயன்ற 25 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஆக அதிக அளவில் அத்தகைய சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியைச் சோதனையிட்டபோது அதில் இருந்த 16 கான்கிரீட் கற்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.
கற்களில் துவாரம் இட்டு பார்த்தபோது சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் 1.3 மில்லியன் வெள்ளி.
கைதுசெய்யப்பட்ட ஆடவர் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் முதற்பணி என்று கூறப்பட்டது.
இத்தகைய கடத்தல் முறைகளைக் கொண்டு பயங்கரவாதிகள் சிங்கப்பூருக்குள் ஆயுதங்கள்,வெடிபொருள்களைக் கடத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்று ஆணையம் தெரிவித்தது.