COVID-19 தொடர்புத் தடங்களைக் கண்டறியும்போது பொய்த்தகவல் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சிடம் பொய்த்தகவல் அளித்ததாக இருவர் மீது தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சிடம் பொய்த்தகவல் அளித்ததாக இருவர் மீது தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
COVID-19 கிருமித்தொற்றுக்கான தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிக்கு இடையூறாக இருந்ததாகவும் சீனவைச் சேர்ந்த தம்பதி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஷி ஷா என்னும் 36 வயது சீனக் குடிமகள், சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும், 38 வயதான அவரது கணவர் ஹூ ஜுன் வூஹானில் வசிப்பவர் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
ஹூ சிங்கப்பூருக்குக் கடந்த மாதம் 22-ஆம் தேதி வந்திருந்தார். மறுவாரம் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியானது. அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதால் ஷி இம்மாதத் தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆனால் ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து 29 ஆம் தேதி வரை அவர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ஷி பொய்த் தகவல்களைக் கொடுத்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்கள் உண்மையிலேயே எங்கெங்கு எல்லாம் சென்றிருந்தனர் என்பதைத் தனது விசாரணையின் மூலம் அமைச்சு அறிந்துக்கொண்டது.
பொதுச் சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் ஆபத்தையும் பொய்த் தகவல்களைத் தருவதால் ஏற்படும் கடுமையான விளைவுகளையும் கருத்திற்கொண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும், ஆறு மாதச் சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.