இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் சென்ற ஆண்டு குறைந்தபோதும் இணையக் குற்றங்கள் அதிகரித்தன
சிங்கப்பூரில், பொதுவான இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் சென்ற ஆண்டு குறைந்தன. ஆனால், இணையக் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்தன.
சிங்கப்பூரில், பொதுவான இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் சென்ற ஆண்டு குறைந்தன. ஆனால், இணையக் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்தன.
அந்தக் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டோர், சுமார் 60 மில்லியன் வெள்ளியை மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்தனர்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இணையக் குற்றவாளிகள், புதுப்புது ஏமாற்றுவழிகளைப் பின்பற்றுவதால், பயனீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
போலியான இணைய முகவரியைக் கொண்டு நடத்தப்படும் மோசடிச் சம்பவங்கள் சென்ற ஆண்டு 30 விழுக்காடு குறைந்தது.
இணையக் கட்டமைப்பை முடக்கி அதைச் சீர்படுத்த பணம் கேட்கும் சம்பவங்களும் சென்ற ஆண்டு 21ஆகக் குறைந்தன. 2017இல் அத்தகைய 25 சம்பவங்கள் பதிவாயின.
இணையப்பக்கத்தைச் சீர்குலைக்கும் அறுநூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.
அதற்கு முந்திய ஆண்டு, ஈராயிரத்துக்கும் அதிகமான அத்தகைய சம்பவங்கள் குறித்துப் புகார் செய்யப்பட்டிருந்தது.
இத்தகைய இணைய அச்சுறுத்தல்கள் குறைந்தாலும், இணையத்தின்வழி பயனீட்டாளர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்தன.
சென்ற ஆண்டு ஆறாயிரத்துக்கும் அதிகமான இணையக் குற்றங்கள் பதிவாயின.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களில் அவை கிட்டத்தட்ட 20 விழுக்காடு.
இதற்கிடையே, இணையக் குற்றவாளிகள் கைரேகை, கருவிழி அடையாளம் உள்ளிட்ட அங்க அடையாளத் தகவல்களைத் திருட முயன்றுவருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அவை அதிக மதிப்புள்ளவை என்பதை அவர்கள் சுட்டினர். கடவுச் சொல் ஊடுருவப்பட்டால் அதைச் சீரமைத்துவிட முடியும். ஆனால், திருடப்பட்ட கைரேகை, கருவிழி அடையாளத்தை மாற்றவே முடியாது என்று நிபுணர்கள் கூறினர்.