கேலாங், குவீன்ஸ்டவுனிலிருந்து நகரம் செல்லும் புதிய சைக்கிள் பாதைகள்
நிலப் போக்குவரத்து ஆணையம் அடுத்த ஐந்தாண்டுகளில் சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பை விரிவுபடுத்தவிருக்கிறது.
சிங்கப்பூர்: நிலப் போக்குவரத்து ஆணையம் அடுத்த ஐந்தாண்டுகளில் சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பை விரிவுபடுத்தவிருக்கிறது. உட்லண்ட்ஸ், தோ பாயோ, சுவா சு காங், கேலாங், குவீன்ஸ்டவுன் பகுதிகளில் புதிய பாதைகள் அமைக்கப்படும்.
உட்லண்ட்ஸில் தற்போது இருக்கும் பூங்கா இணைப்புக் கட்டமைப்பில் மேலும் சுமார் 20 கிலோமீட்டர் சேர்க்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
புதிய பாதைகள் வட்டாரவாசிகளை மார்சிலிங், உட்லண்டஸ், அட்மிரல்ட்டி ரயில் நிலையங்களுடனும் வருங்கால உட்லண்ட்ஸ் சவுத் ரயில் நிலையத்துடனும் இணைக்கும்.
தோ பாயோவில் புதிய 7 கிலோமீட்டர் சைக்கிள் பாதைக் கட்டமைப்பு நிறுவப்படும்.
தோ பாயோ, பிரேடல் ரயில் நிலையங்கள், தோ பாயோ நகர மையம் ஆகியவற்றுடன் வட்டாரவாசிகளை அது இணைக்கும்.
அங்குள்ள பேருந்து நிறுத்தங்களும் சைக்கிளோட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும்.
சுவா சு காங்கில் சைக்கிளோட்டக் கட்டமைப்பு 12 கிலோமீட்டர் அதிகரிக்கப்படும்.
கேலாங்கில் 150 மீட்டர் பாதையும் குவீன்ஸ்டவுனில் 2.3 கிலோமீட்டர் பாதையும் பூங்கா இணைப்புக் கட்டமைப்பில் சேர்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. வட்டாரவாசிகள் அவற்றின் மூலம் நகரத்திற்கு சைக்கிளில் செல்லலாம்.