சாலையில் சைக்கிளோட்டும்போது பாதுகாப்பை முதன்மையாகக் கடைப்பிடிக்கிறீர்களா?...
சாலையில் சைக்கிளோட்டும்போது பாதுகாப்பை முதன்மையாகக் கடைப்பிடிக்கிறீர்களா?...
கடந்த இரண்டே நாள்களில் சிங்கப்பூரில், சாலை விதிமுறைகளை மீறியதற்காக 34 சைக்கிளோட்டிகள் பிடிபட்டுள்ளனர்.
சாலையில் சைக்கிளோட்டுவோருக்கு ஆபத்து நேராமல் இருக்க, பல்வேறு விதிமுறைகளை அரசாங்கம் வகுத்துத் தந்துள்ளது...
அவற்றை, சைக்கிளோட்டிகள் எந்த அளவுக்குப் பின்பற்றுகின்றனர்?...
குறிப்பாக எவற்றையெல்லாம் தவறாமல் பின்பற்றிவருகின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பியது 'செய்தி'.
திரு. அண்ணாதுரை, திரு. சரவணன் ஆகிய இருவரும் சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்கள்.
அவர்கள் காரும் ஓட்டுவதுண்டு.
அவர்களிடம் பேசியது 'செய்தி'...
சாலையில் சைக்கிளோட்டும்போது குறிப்பாகப் பின்பற்றும் முக்கியப் பாதுகாப்பு விதிகள்...
இருவரும் தலைக்கவசம் அணிந்துதான் சாலையில் சைக்கிளோட்டுவதாகக் குறிப்பிட்டனர். இருவரது சைக்கிள்களின் முன்னும் பின்னும் ஒளிரும் பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
சாலையில் கார் ஓட்டிச் செல்லும்போது நீங்கள் காணும் சைக்கிளோட்டிகள் எவ்வாறு மேலும் பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டலாம்?
சாலையில் அதிக வாகனங்கள் செல்லும் உச்சநேரத்தில், சைக்கிளோட்டுவதைத் தவிர்ப்பது நல்லது என்று குறிப்பிட்டார் திரு. அண்ணாதுரை.
திடீரெனச் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் செல்வதைச் சைக்கிளோட்டிகள் தவிர்க்கவேண்டும். இதனால், விபத்துகள் கூட நேரலாம்,
என எச்சரித்தார் திரு. சரவணன்.
சிங்கப்பூரில் அதிகமான சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன...
அவற்றைப் பயன்படுத்தாமல் சைக்கிளோட்டிகள் சாலையில் ஓட்டிச் செல்வதை, நம்மில் பலரும் கவனித்திருப்போம்.
அது ஏன் என இருவரிடமும் கேட்டபோது...
"சைக்கிள் பாதைகள் பொதுவாகப் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ளன"
என இருவரும் கூறினர்.
பூங்காக்களில் பலரும் இருக்கின்றனர்.
குறிப்பாக, பிள்ளைகள், முதியோர் அங்குமிங்கும் நடந்து செல்வதால் அங்கு சைக்கிளோட்டுவது கடினமாக இருக்கும் என இருவரும் கருத்துத் தெரிவித்தனர்.
சைக்கிள் பாதையின் குறுக்கே யார் வந்தாலும் நிறுத்தி நிறுத்திச் செல்வது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
சாலையில், வேகத்தடையைப் பயன்படுத்தும் அவசியமின்றி இடைவிடாமல் சைக்கிளை மிதித்துச் சென்று உடற்பயிற்சி செய்யவே பலரும் விரும்புகின்றனர். ஆனாலும், பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. சாலையில் சைக்கிளோட்டுவது, ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
எனினும், பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றி, உத்தேச ஆபத்துகளைக் கவனத்தில்கொண்டு சாலையில் சைக்கிளோட்டினால் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்கிறது நிலப்போக்குவரத்து ஆணையம்.