பூமி தினம் : சிங்கப்பூரில் மறுபயனீடு குறித்து அதிக விழிப்புணர்வு தேவை - சுற்றுப்புற ஆர்வலர்
பூமி தினம் : சிங்கப்பூரில் மறுபயனீடு குறித்து அதிக விழிப்புணர்வு தேவை - சுற்றுப்புற ஆர்வலர்
இன்று (ஏப்ரல் 22) "பூமி தினம்" அனுசரிக்கப்படுகிறது.
உலகத்தின் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டின் கருப்பொருள் "Restore Our Earth " அதாவது "நமது பூமியை மீட்டெடுப்போம்" என்பதாகும்.
சிங்கப்பூரும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு பல வழிகளை நடைமுறைப்படுத்தியும் ஆராய்ந்தும் வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு சிங்கப்பூர் எவ்வளவு முன்னுரிமை கொடுத்து வருகிறது, எதில் அதிக கவனம் செலுத்தலாம் என்பதை சுற்றுப்புற ஆர்வலர் வெங்கட்ராமன் " செய்தி" யிடம் பகிர்ந்து கொண்டார்.
எதில் அதிக கவனம் செலுத்தலாம்?
குப்பைகளை மறுபயனீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தலாம்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரில் குப்பைகள் நல்லபடியாக மறுபயனீடு செய்யப்படுகின்றன.
இருப்பினும் அதில் முழு வெற்றி கிட்டவில்லை என்பது எனது கருத்து.
மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள் என குப்பைகளைத் தனித்தனியாகப் போட குப்பைத் தொட்டிகள் உள்ளன.
ஆனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் அதைச் சரியாகப் பின்பற்றவில்லை.
அவர்கள் சரியாகச் செய்தாலும் சில முறை குப்பையை வெளியேற்றும் ஊழியர்கள் அதில் தவறுகள் செய்கின்றனர்.
அதனால் மறுபயனீட்டு நடவடிக்கையில் முழு வெற்றி இல்லை.
இளையர்களுக்கு உங்கள் கருத்து :
- முடிந்த வரை தேவையில்லாத இடங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
- பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம்.
- தண்ணீரைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
தனிமனிதராகச் சுற்றுச்சூழலுக்குப் பல நன்மைகளைச் செய்ய முடியும் ஆனால் அதைக் கடைபிடிப்பதுதான் சவாலானது.
இருந்தாலும் சில குறிப்புகளைப் புரிந்து கொண்டு நடந்தால் அது உலகிற்கு வெற்றி.
- எந்தப் பொருள்களை மறுபயனீடு செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
- மறுபயனீடு செய்யக்கூடிய பொருளைச் சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்
- உணவுப் பொருள்களை வாங்கும் பிளாஸ்டிக் கலன்கள் போன்ற பொருள்களை மறுபயனீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தலாம்
உலக நாடுகள் பல, சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன. அதனால் நாமும் நம்மால் முடிந்தவரை உலகத்திற்கு உதவியாக இருக்கலாம்
என்றார் சுற்றுப்புற ஆர்வலர் வெங்கட்ராமன்.