பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் உத்தியின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் இயற்கை வளம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் மசகோஸ்
சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃபிலி பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் உத்தியின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் இயற்கை வளம் மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃபிலி பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் உத்தியின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் இயற்கை வளம் மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தைக் கையாள பல நாடுகளின் அரசாங்கங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
கடற்பகுதியிலுள்ள சதுப்பு நிலங்களை மேம்படுத்துதல், சிங்கப்பூருக்கே உரிய மரங்களையும் புதர்களையும் பாதுகாத்து, மீண்டும் நட்டு வைத்தல் ஆகியவை பருவநிலை மாற்றத்தைக் கையாள சிங்கப்பூர் எடுக்கவிருக்கும் முயற்சிகளில் சில.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதுடன், உயரும் கடல்மட்டத்திலிருந்து தீவைப் பாதுகாக்க, அந்த முயற்சிகள் உதவும்.
புலாவ் உபின் பகுதியில் உள்ள சதுப்புநிலங்கள் மீட்கப்பட்டுப் பராமரிக்கப்படும்.
பூங்காக்களிலும் இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகளிலும் சுமார் 250,000 மரங்கள் நட்டுவைக்கப்படும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் உள்ள நாடுகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டு, தங்களது நாடுகளில் செய்துகொண்ட மாற்றத்தை அறிவிக்கவேண்டும்.
தேசியப் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வறிக்கையை 2022ஆம் ஆண்டு வெளியிட சிங்கப்பூர் திட்டமிட்டு வருகிறது.
அனைத்துலக ஆய்வு முடிவுகள் அதில் இடம்பெற்றிருக்கும்.
வருங்காலத்தில் பருவநிலைக் கொள்கைகளில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.