பொய்யான தகவல்களைப் பரப்பும் போக்கு உலகளாவிய பிரச்சினை: சார்ல்ஸ் சோங்
இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பும் போக்கு உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக நாடாளுமன்றத் துணை நாயகர் சார்ல்ஸ் சோங் கூறியுள்ளார்.
இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பும் போக்கு உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக நாடாளுமன்றத் துணை நாயகர் சார்ல்ஸ் சோங் கூறியுள்ளார். அந்தப் பிரச்சினையை முறியடிப்பதன் தொடர்பிலான பொதுக் கருத்தறியும் நடவடிக்கையின் தொடக்கத்தில் அவர் உரையாற்றினார்.
கருத்துத் திரட்டும் நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவின் தலைவர் அவர்.
இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பும் பிரச்சினையை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் சமாளிக்கவேண்டி இருப்பதாகவும் திரு. சோங் சொன்னார். அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் திரட்ட வேண்டும் எனத் தெரிவுக் குழு ஒருமித்த முடிவெடுத்திருப்பதை அவர் சுட்டினார். தனிநபர்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் என 79 பேர் அவர்களின் கருத்துகளை முன்வைக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம், 8 வெவ்வேறு நாட்களில் கருத்துத் திரட்டும் நடவடிக்கை கட்டங்கட்டமாய் நடைபெறும். அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள முதற்கட்டக் கருத்தறியும் நடவடிக்கையில், அந்தப் பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் குறித்துக் கேட்டறியப்படும்.
ஊடகம், தொழில்நுட்பம், இன - சமய உறவுகள், தேசியப் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் திரு. சோங் கூறினார்.
சேகரிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பும் போக்கைச் சமாளிப்பதற்கான பரிந்துரைகளைத் தெரிவுக் குழு நாடாளுமன்றத்திடம் முன்வைக்கும்.