சிங்கப்பூர் உணவு விநியோக நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வேலை செய்த வெளிநாட்டு ஊழியர்கள் கைது
உணவு விநியோக நிறுவனங்கள், அவற்றின் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கக் கூடுதல் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
உணவு விநியோக நிறுவனங்கள், அவற்றின் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கக் கூடுதல் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Deliveroo, Foodpanda கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சிங்கப்பூரில் பணிபுரிந்த இரு மலேசியர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து அமைச்சு அவ்வாறு கூறியுள்ளது.
சமூக நுழைவு அனுமதியில் இங்கு வந்த அவ்விரு மலேசியர்களும் சிங்கப்பூரில் இருப்பவர்களின் கணக்குகளைக் கொண்டு உணவு விநியோக ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.
முதல் நபர் ஏப்ரல் 25 அன்று 313@Somerset கடைத்தொகுதியில் பிடிபட்டார்.
அந்த 24 வயது ஆடவர் தான் பயன்படுத்திய கணக்குக்குச் சொந்தக்காரரான சிங்கப்பூரருக்குத் தன் சம்பளத்தில் ஒரு பங்கைக் கொடுத்து வந்ததாக அமைச்சு கூறியுள்ளது.
முதலாம் நபர் பிடிபட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இரண்டாம் நபரும் பிடிபட்டார்.
சட்டவிரோதமாகத் தன்னை வேலைக்கு அமர்த்திய சிங்கப்பூரருக்கு வேலை செய்து வந்தார் அந்த 21 வயது ஆடவர்.
சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் அனைத்து வெளிநாட்டினரும் தகுந்த வேலை அனுமதி உரிமத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்பதை மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.