அஞ்சல்பெட்டிகளிலிருந்து மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகள் திருட்டு - 14 பேர் கைது
வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளை அஞ்சல்பெட்டிகளிலிருந்து திருடிய சந்தேகத்தின் பேரில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளை அஞ்சல்பெட்டிகளிலிருந்து திருடிய சந்தேகத்தின் பேரில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 8 பேர் ஆண்கள். 6 பேர் பெண்கள். சந்தேக நபர்கள் 16 லிருந்து 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
தீவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களின் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டவை என்று தெரிந்தும் அவற்றை பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 28 வயதுப் பெண்ணும் பிடிபட்டார்.
வேறு இரு சம்பவங்களில், பற்றுச்சீட்டுகளை நேர்மையற்ற முறையில் சொந்தமாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 70 வயது ஆடவரிடமும் 26 வயதுப் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
Kitchener சாலையிலும் மோட் (Maude Road) சாலையிலும் அமைந்துள்ள குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் 16 லிருந்து 18 வயதுக்கு இடைப்பட்ட மூவர் நேற்று முன்தினம் (அக்டோபர் 15) கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்.
ரெட்ஹில் (Redhill),
தோ பாயோ, தியோங் பாரு, அங் மோ கியோ, அல்ஜூனிட், செங்காங் உள்ளிட்ட இடங்களிலிருந்து மற்றவர்கள் பிடிபட்டனர்.
திருட்டுச் சம்பவங்கள் குறித்த விசாரணை தொடர்கிறது.
சம்பவங்களுக்கு இடையில் தொடர்பு இல்லை என்று காவல்துறை கூறியது.
அஞ்சல்பெட்டிகளிலிருந்து வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டதன் தொடர்பில் மற்ற குடியிருப்புப் பேட்டைகளிலும் புகார்கள் அளிக்கப்பட்டதாக அது சொன்னது.