ஆசிய வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளைத் தயாரிக்க சிங்கப்பூரில் புதிய ஆய்வுக்கூடம்
உணவே மருந்து என்ற போக்கு அதிகரித்துக்காணப்படுகிறது.
ஆசிய வாடிக்கையாளர்களுக்காக மேலும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சிங்கப்பூரில் புதிய ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புரதச் சத்துள்ள உணவுகள், கொழுப்பில்லாத சமையல் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான தெரிவுகளைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வுசெய்யப்படும்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும். தேசிய ஆய்வு அறநிறுவனமும் Wilmar வர்த்தகக் குழுமமும் இணைந்து ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன.
110 மில்லியன் வெள்ளி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடம் ஆசியர்களின் உணவுவகைகள் குறித்து ஆய்வு நடத்தும் முதல் கூடமாகும்.
சிங்கப்பூரிலும் சுற்றுவட்டாரத்திலும் காணப்படும் உடல்பருமன், நீரிழிவு போன்ற வாழ்க்கைமுறையைப் பாதிக்கும் நோய்களைக் கையாள்வதற்கு முறையான உணவுவகைகள் அவசியம்.
சிங்கப்பூரர்களின் உடல் அமைப்பு, உணவுப் பழக்கங்களால் உடல்நலனில் ஏற்படும் தாக்கங்கள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நீரிழிவு நோயை எதிர்க்க அது உதவும் என்று நம்புவதாகத் தேசிய ஆய்வு அறநிறுவனத் தலைவர் ஹெங் சுவீ கியெட் ஆய்வுக் கூடத்தின் திறப்பு விழாவில் கூறினார்.
உணவே மருந்து என்ற போக்கு அதிகரித்துக்காணப்படுகிறது.
WIL@NUS ஆய்வுக்கூடத்தில் 11 வகையான சுகாதார உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
60க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அதன் தொடர்பான துறைகளில் அடுத்த ஐந்தாண்டுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.